வானில் தெரிந்தது பிறை: இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்!
சென்னை: சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதால் நேற்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிறை தெரிந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனிதமான பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பதும் ஒன்றாகும்.

ரமலான் பண்டிகை மற்றும் ரமலான் மாத நோன்பு ஆகியவை பிறை தெரிவதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. உலகில் அனைத்து பகுதிகளிலும் எப்போது பிறை தெரிகிறதோ அதை வைத்தே நோன்பு தேதி மற்றும் பண்டிகை கொண்டாடப்படும். ஒவ்வொரு பகுதிகளுக்கு இந்த தேதி ஒருநாள் வரை மாறுபடும்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை இவர்கள் தண்ணீர், உணவு போன்ற எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள்.
இந்த புனித மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. பல நூற்றாண்டுகாலமாக ரமலான் நோன்பை இஸ்லாமிய மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த மாதத்தில் 30 நாள்கள் நோன்பு கடைப்பிடிக்கப்படும். 30 வது நாளில் வானில் பிறை தெரிந்த அடுத்தநாள் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
சவுதி அரேபியாவில் சுதைர், துமைர் ஆய்வகங்களில் ரமலான் தொடக்கத்தை குறிக்கும் பிறை வெள்ளிக்கிழமை தென்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சவுதி அரேபியாவில் ரமலான் புனித மாதம் வெள்ளிக்கிழமை இரவு அதவாது பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்ததையடுத்து, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர். இன்று மார்ச் 1 ஆம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மார்ச் 1 ஆம் தேதி பிறை தெரிந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைமை காஜி தாவுத் கைசர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று பிறை தென்பட்டுள்ளது. எனவே நாளை 02.03.2025 முதல் தமிழ்நாட்டில் புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications