சென்னை விமான நிலையத்தில் பெரும் குழப்பம்.. ரேப்பிட் டெஸ்டிற்கு அதிக கட்டணம் வசூல்.. பயணிகள் அவதி
சென்னை: ஓமிக்ரான் அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்து வரும் நிலையில், விமான பயணங்களுக்கு அறிவிக்கப்படும் புதுப்புது கட்டுப்பாடுகள் விமான பயணிகளுக்குக் கடைசி நேரத்தில் மிகப் பெரிய தலைவலியைக் கொடுப்பதாக அமைகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாகத் தான் உலகம் மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.
கடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலை
இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 25ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு இந்த ஓமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்துக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியா கவலைக்குரிய நாடுகளாக 8 நாடுகளைப் பட்டியலிட்டு அங்கிருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோல மற்ற நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
புது கட்டுப்பாடுகள்
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. சில நாடுகளுக்குச் செல்ல RT PCR சோதனை கட்டாயம். சில நாடுகளுக்குச் செல்ல RT PCR சோதனை கட்டாயமில்லை. இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பங்களைச் சென்னை விமான நிலையத்திற்குச் செல்லும் அனைவரும் காணலாம்.
சென்னை விமான நிலையம்
மதுரையை சேர்ந்த செல்வம் (24) மற்றும் வெங்கடேஷ் (34) ஷார்ஜா செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். ரூ 3,000 உடற்தகுதி சான்றிதழ், ரூ 1000 கொடுத்து RT PCR சோதனை எனத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இருவரும் வைத்திருந்தனர். இருப்பினும் சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஷார்ஜா செல்ல ரேப்பிட் PCR சோதனை முடிவுகள் கட்டாயம் எனத் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள், அதற்குத் தனியாக ரூ 3,400 செலவாகும் எனத் தெரிவித்துவிட்டனர்.
ரேப்பிட் டெஸ்ட் கட்டாயம்
செல்வம் மற்றும் வெங்கடேஷ் இருவருமே ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இருவரும் கட்டிட வேலை செய்ய ஷார்ஜா செல்கின்றனர். அப்படி இருக்கும் போது, திடீரென கொரோனா சோதனைக்கு ரூ 3,400 வேண்டும் என்பது விமான அதிகாரிகள் கூறியது அதிர்ச்சி அளித்துள்ளது. ஏனென்றால் இருவரிடமும் அந்த பணம் இல்லை. நல்வாய்ப்பாக அவர்கள் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையம் வந்துவிட்டதால், அவர்கள் உறவினர்களிடம் பேசி பணத்தைத் தயார் செய்தனர். ஆனால், இதே வாய்ப்பு அனைவருக்கும் அமையும் என உறுதியாகக் கூற முடியாது.
அதிக கட்டணம்
இப்படி புதிது புதிதாக அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷார்ஜா உள்ளிட்ட சில நாடுகளுக்குச் செல்ல ரேப்பிட் டெஸ்ட் கட்டாயம் என்றும் இருப்பினும் இதனை விமான நிறுவனங்கள் முன்கூட்டியே பயணிகளுக்குத் தெரிவிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தான் விமான நிலையத்தில் ஏற்படும் குழப்பங்களும் காரணம். அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் வெறும் 900 ரூபாய்க்கு செய்யப்படும் இந்த சோதனைக்கு விமான நிலையத்தில் ரூ 3,400 வசூலிக்கப்படுவது செய்யப்படுவது ஏன் எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விமானநிலைய அதிகாரிகள்
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபிக்குச் செல்லும் பயணிகள், விமானம் கிளம்புவதற்கு 48 மணி நேரத்திற்குள் செய்யப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனை தேவை. அத்துடன் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள் செய்யப்படும் ரேபிட் பிசிஆர் சோதனை முடிவுகளும் தேவை. விமான நிலையத்தில் கூட்டம் அதிகம் சேருவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கூடுதல் ரேப்பிட் டெஸ்ட் இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
Recommended Video
சுகாதார துறை
விமான நிலையத்தில் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் செய்வது குறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கொரோனா ரேபிட் டெஸ்ட் சோதனைக்கு விலை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும், விமான நிலையத்தில் ஏழைப் பயணிகளுக்கு இலவசமாகச் சோதனைகள் செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.