இதுவா டிஜிட்டல் மயமாக்கம்.. ஏழைகள் ஏடிஎம்மை தேய்க்க பணக்காரர்கள் திளைக்கிறார்கள்! ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ஏடிஎம் பரிவர்த்தன கட்டண உயர்வுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்தியாவில் தற்போது கிட்டதட்ட அனைத்து தரப்பினரும் வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கிறார்கள். ஜன் தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு அரசின் நலத்திட்ட நிதி உதவிகளும் வங்கிகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. இதனால், சாமானிய ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தரம், வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வங்கி சேவையை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.

வங்கி கணக்கில் உள்ள பணத்தை தற்போது ஏடிஎம் வாயிலாகவே பெரும்பாலானோர் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க சேவைக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத மற்ற வங்கி ஏடிஎம்-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது ரூ. 21 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடணம் வரும் மே 1 ஆம் தேதி முதல் ரூ 23 ஆக அதிகரிக்க ரிசர்வ் பேங்க், வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ஒரு மாதத்தில் 5 முறை ஏடிஎம்மில் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதற்குபின் நீங்கள் ஏடிஎம் இருந்து பணம் எடுத்தால் மே மாதம் முதல் 23 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கணக்கு இல்லாத வேறு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தினால், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மூன்று பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். பின்னர் மேற்கொள்ளப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அக்கவுண்ட்டில் பண இருப்பை சரிபார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இந்த முறைப்படி கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டண உயர்வுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:-
அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து என்ன? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும். ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications