சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை.. தாமதம் ஆகிட்டே போகுதே.. இதுதான் காரணமா? வெளியான தகவல்
சென்னை: சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை எப்போது முதல் தொடங்கும் என்பது பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இனி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், தென் மாவட்ட மக்கள் இந்த ரயில் சேவையை எதிர்பார்த்து உள்ள நிலையில், ரயில் சேவை தொடங்க தாமதம் ஆவதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பல்வேறு சொகுசு வசதிகளை கொண்ட ரயிலாக இருந்தது. இதனால், பயணிகளுக்கும் இந்த ரயில் மீதான ஆர்வம் அதிகரித்தது. தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், பயோ டாய்லட்டுகள் என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சிறப்பான வசதிகள் இருந்தாலும் இதில் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதாக பயணிகள் மத்தியில் ஆதங்கம் இல்லாமலும் இல்லை. எனினும், வந்தே பாரத் ரயில்களை அதிக வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்படி, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த ரயில் இயக்குவதற்காக தண்டவாள மேம்பாட்டு பணிகள் ஆகியவை நிறைவடைந்து விட்டன. எனினும், வந்தே பாரத் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதற்கான கால தாமதம் ஆவது ஏன்? என்பது பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலை நிறுத்தி வைப்பதற்கு தனியாக ஒரு பிட் லைன் தேவைப்படும்.
நெல்லை ரயில் நிலையத்தில் இந்த வசதி தற்போது இல்லை. எனவே, சென்னை அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து மட்டுமே வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும் நிலை உள்ளது. இதன் காரணமாக நெல்லை ரயில் நிலையத்தில் பிட் லைன் அமைக்க தேவையான அனுமதியை தெற்கு ரயில்வே அளித்துள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு தான் சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது" என்றனர். தொடர்ச்சியாக இனி பண்டிகைகள் வர உள்ள நிலையில், அதற்கு முன்பாக சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான ரயிலை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications