சென்னையில் மழை குறையத் தொடங்கிவிட்டது.. இனி மீட்பு பணிகளில் வேகம்தான்- அமைச்சர் பேட்டி
சென்னை: சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மழை குறையத் தொடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மீட்புப் பணிகள் வேக படுத்தப்படும் என்று பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சென்னை அருகே கரையைக் கடந்த நிலையில், மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
அப்போது அவர் கூறியதாவது:

ரெட் அலர்ட்
சென்னைக்கு அதி கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வழங்கியிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதிதீவிரமாக காற்று வீசும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட வில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தற்போது மழை குறைய தொடங்கி விட்டதால் இரவு முதல் மீட்பு பணிகளை இன்னும் வேகப்படுத்த இருக்கிறோம்.

அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு
அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், மணிமங்கலம் சாலை முதல் தர்கா சாலை வரையுள்ள பகுதிகளான, அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர் , மகாலட்சுமி நகர், ஸ்ரீ ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய பேரிடர் மீட்பு படை
அனைத்து மீன்பிடி படகுகளும், இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. மீட்பு பணிகளில் 48 படகுகள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன. காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட வசதியாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு இன்று அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகமொத்தம் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 11 குழுக்கள் தமிழக அரசினுடைய குழுக்கள் 4 என, மொத்தம் 15 குழுக்கள் களத்தில் உள்ளனர்.

முகாம்களில் எத்தனை பேர்
செங்கல்பட்டு , நாகப்பட்டினம், பெரம்பலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை , திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவாரூர் , கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 185 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் . சென்னை நகரில் மட்டும் 44 முகாம்களில் 2240 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உணவு வழங்குவதில் கவனம்
இதுவரை 26 லட்சத்துக்கும் அதிகமான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன பொதுமக்களுக்கு உணவு வழங்குவதில் எந்த விதமான பாதிப்பும் இருக்க கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 200 அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் சென்னை மாநகராட்சியை பொருத்தளவில் இன்று பெய்த மழையின் காரணமாக 523 இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது, அதில் நாற்பத்தி ஆறு இடங்களில் தேங்கியிருந்த அகற்றப்பட்டு இருக்கிறது. மற்ற இடங்களில் நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பத்து சுரங்க பாதைகளில் நீர் இருக்கிறது அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications