தேசம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா? தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லையா- டிடிவி தினகரன் கொதிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை குடியரசுத் தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடம் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிராகரிக்கப்பட்டு உள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசின் வாகனம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இதற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டனத்தில், டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மத்திய அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. ஆங்கிலேயருக்கு எதிராக வீரப்போர் புரிந்த முதல் பெண் அரசி ராணி வேலு நாச்சியாருக்கும், தன் சொத்துக்களை விற்று சுதேசிகப்பல் ஓட்டி சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனாருக்கும், அனல்பறக்கும் கவிதைகளால் விடுதலை உணர்வைக் கிளர்ந்தெழ செய்த மகாகவி பாரதியாருக்கும் இந்த தேசம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா?
குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்தியும் இடம்பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்குவதுதான், இந்திய விடுதலைக்காக முதல் முழக்கமிட்ட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமையும், என்று குறிப்பிட்டுள்ளார்.