சென்னையில் ஓய்வெடுக்கும் மழை.. முழுவீச்சில் மீட்பு பணிகள்.. இந்த 10 சுரங்கபாதைகளில் மழைநீர் அகற்றம்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் சென்னையில் கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு அதிகனமழை கொட்டியுள்ளது.
இந்த பேய்மழை காரணமாக சென்னையின் எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

சென்னையில் வெள்ளம்
ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டனர். சாலை போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளது.

முழு வீச்சில் மீட்பு பணிகள்
ரயில் போக்குவரத்தும் இன்னும் சீராகவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாலுமட் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை சற்று ஓய்வு எடுத்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

10 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம்
சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 10 சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது மாணிக்கம் நகர், எம்.சி.சாலை, ஸ்டான்லி நகர், ஆர்.பி.ஐ சுரங்கபாதைகள் மற்றும் திரு.வி.க. நகர், பெரம்பூர் சாலை, வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்காகம்பாக்கம், ஜோன்ஸ் சாலை, பஜார் சாலை சுரங்கபாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளன.

மரங்கள் அகற்றம்
இதேபோல் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீர் ராட்சத மின்மோட்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றன. கனமழை, காற்று காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மின்வாரிய ஊழியர்கள்
தியாயராய நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாம்பலம் காவலர் குடியிருப்பு, கோடம்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு முதல் தெரு, விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா தெரு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.












Click it and Unblock the Notifications