நகைக்கடன் விதியில் திடீர் மாற்றம்.. தங்க நகையை அடகு வைத்தால் கந்துவட்டி தலைதூக்குதே.. என்ன தீர்வு
சென்னை: வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.. மருத்துவ செலவு, கல்வி செலவு, மற்றும் அவசர தேவைகளுக்கு நகைக்கடனையே பொதுமக்கள் அதிகமாக நம்பியிருக்கும் சூழலில், ரிசர்வ் வங்கியின் விதிகள் ஏழை எளிய மக்களுக்கும் குறிப்பாக சிறு குறு விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஏழை எளிய, நடுத்த மக்களுக்கு, விவசாயிகளுக்கு அவசரத்துக்கு கைகொடுத்து உதவுவது தங்க நகைக் கடனாகும்.. ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய விதியானது, பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்துள்ளது.

நகைக் கடன் பெற்றவர்கள் ஒவ்வொரு வருடமும், காலக்கெடு முடியும் போது, வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும், அதற்கு அடுத்த நாளில் தான் நகையை மறு அடகு வைக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி விதிகளை மாற்றியுள்ளது.
நகைக்கடன் அசல்
கடன் பெற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைப்பதற்காகவே, இந்த புதிய விதிகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் காரணம் சொல்கிறார்கள்.
எனினும், இந்த புதிய விதியானது, பெண்களுக்கு கவலையை தந்து வருகிறது.. நகைக்கடனுக்கான அசலை கட்டுவதற்காக, கடன் வாங்கும் நிலைமை ஏற்படும் என்றும், ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன..
புதிய விதிகளால் கலக்கம்
அதுமட்டுமல்ல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் வட்டிக் கடைகளை விட வட்டி குறைவு என்பதால்தான், அவசர தேவைக்கு நகைகளை அடகு வைக்க, கடன் பெற தேசிய, தனியார் வங்கிகளையே பலரும் நம்பியிருக்கிறார்கள். இப்போது ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால், முழு தொகையையும் கட்டி நகையை மீட்டு விடுங்கள், பிறகு மறுநாள் புதிய நகைக்கடன் பெறுங்கள் என வங்கியில் சொல்கிறார்களாம்.
இதைக்கேட்டு பதறிப்போகும் மக்கள், தங்களது நகைகள் ஏலத்துக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அதிக வட்டிக்கு வெளியில் பணம் வாங்கி நகையை மீட்டு, மீண்டும் அடகு வைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாவதாக வருத்தத்துடன் சொல்கிறார்கள். அல்லது அவசரத்துக்கு வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிக்கும் பணத்தை வாங்க நேரிடுகிறது. பிறகு, இவர்களுக்கு தனியாக வட்டியை தரவேண்டியிருக்கிறது.
பழைய நிலைமை தொடர வேண்டும்
குறைந்த நேரத்தில் மீண்டும் வங்கிகளில் நகைகள் அடகு வைக்கப்பட்டாலும், இடைப்பட்ட நேரத்தில் வட்டிகட்ட முடியாமல், வட்டிக்காரர்களிடம் வசமாக மாட்டிக்கொள்ள நேரிடுகிறது.
வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் நிதியை பெறுவதற்கு முன்பு, முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமையும் அதிகமாகிறது. இதனால், முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையை உருவாக்கிவிடும்.
எனவே, கந்துவட்டியை ஊக்குவிக்கும் இந்த செயலை உடனே வங்கிகள் நிறுத்திவிட்டு, நகைக்கடனில் பழைய நிலையை தொடர வேண்டும் என்றும், வங்கிகளும், வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படாத வகையில் விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications