Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் கூட்டத்திலும் எதிரொலித்த ஸ்டாலின்..பாஜக, அதிமுகவுக்கு குட்டு! கிளைமாக்ஸில் அந்த 7 பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று மக்களைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

mk stalin Congress Mk Stalin Politics

இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,"

தீர்மானம் :1 தமிழக வாக்காளர்களுக்கு நன்றி: கடந்த 2004 மக்களவை தேர்தலில் மதவாத பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அன்னை சோனியா காந்தியின் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் நாற்பது இடங்களிலும் அமோக வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதைத் தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலை தவிர நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இது ஒரு கொள்கை கூட்டணி. இக்கூட்டணிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்ததின் விளைவாக 2019 மக்களவை தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாற்பது இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மகத்தான சாதனைகளை புரிந்திருக்கிறோம். இத்தேர்தலில் இந்தியா கூட்டணி பதிவான மொத்த வாக்குகளில் 47 சதவிகிதம் பெற்றிருக்கிறது. நடைபெற்ற வாக்குப்பதிவின்படி தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 223 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று அனைத்து மக்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது.

ஆனால், எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. 23 சதவிகிதமும், பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி 18 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. அ.தி.மு.க. 7 தொகுதிகளிலும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும், பா.ம.க. 6 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளனர். ஆனால், இந்த தோல்வியை மூடி மறைக்கிற வகையில் திரிபு வாதங்களை அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். ஆனால், இத்தகைய வாதங்கள் தமிழக மக்களிடம் எடுபடாது. கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2- தலைவர் ராகுல்காந்திக்கு பாராட்டு: காந்தி, நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தி மக்கள் பிரச்சினைகளை அறிவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 6500 கி.மீ. தூரம் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறையாக மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டார். இதன்மூலமாக எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி 26 கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி அமைவதற்கு தலைவர் ராகுல்காந்தியின் அணுகுமுறை துணையாக இருந்தது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது எண்ணிக்கையை இருமடங்காக கூட்டி இன்றைக்கு 102 இடங்களை பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றி பெற்றதற்காக தீவிரமான பரப்புரை மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கும், அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், திரு.ராகுல்காந்தி அவர்களுக்கும், பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

mk stalin Congress Mk Stalin Politics

தீர்மானம் : 3 - பா.ஜ.க. ஆட்சிக்கு பாடம்: மக்களவைத் தேர்தல் தொடக்கத்திலேயே பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் அரசமைப்புச் சட்டத்தை மாற்ற 400 இடங்களில் வெற்றி பெற வேண்டுமென்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததையெல்லாம் இட்டுக்கட்டி நவீன கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறுபான்மையினர் மீது கடுமையான தாக்குலை பிரதமர் பதவி வகிக்கிறோம் என்பதை பொருட்படுத்தாமல் மிகமிக தரம் தாழ்ந்த பரப்புரையை நரேந்திர மோடி மேற்கொண்டார். ஆனால், மக்கள் நரேந்திர மோடியின் அவதூறு பிரச்சாரத்தை நிராகரித்து பா.ஜ.க.வின் வெற்றியை பெருமளவில் குறைத்து பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

2019 மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., 2024 இல் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கடந்த தேர்தலை விட 63 இடங்கள் குறைவானதாகும். அதேபோல, அறுதிப் பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணிக்கு சில மாநிலங்களில் வலுவான கூட்டணி அமையாததாலும், தேர்தல் களம் சமநிலைத்தன்மையோடு அமையாத வகையில் பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூபாய் 8000 கோடி நிதியை குவித்து தேர்தலை சந்தித்தது. அதேநேரத்தில் அகில இந்திய காங்கிரசின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 135 கோடி வருமான வரித்துறை மூலம் முடக்கப்பட்டது. இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற முடியாமல் போனது.

மேலும், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிவுகளை ஜனநாயக உணர்வோடு மகிழ்ச்சியோடு எதிர்கொண்டது. இதற்கு காரணம் நடைபெற்ற மக்களவை தேர்தல் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்ற அடிப்படையில் நடந்தது. இறுதியாக ஜனநாயகம் வெற்றி பெற்றது. சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது. தற்போது அமைந்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே தவிர, எதேச்சதிகார மோடி ஆட்சி அல்ல. இதன்மூலம் நரேந்திர மோடியின் சர்வாதிகார பாசிச அரசியலுக்கு மக்கள் தேர்தல் தீர்ப்பின் மூலம் முடிவு கட்டியிருக்கிறார்கள். இத்தகைய தீர்ப்பை வழங்கிய இந்திய வாக்காளப் பெருமக்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 4 - நீட் முறைகேடு: நீட் தேர்வு முறைகேடுகளும், குளறுபடிகளும் இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தலைவர் ராகுல்காந்தி நீட் தேர்வு குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று உறுதி கூறியிருக்கிறார். மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் சில மாணவர்கள் 718, 719 பெற்றிருப்பது நடைமுறை சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

1500 மாணவர்களுக்கு தேர்வுக் குழுவினர் கருணை மதிப்பெண் வழங்கியிருப்பதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியபிரதேச மாநில வியாபம் தேர்வு ஊழலைப் போல நீட் ஊழல் நாடு முழுவதும் எதிரொலித்திருக்கிறது. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளினால் 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற வகையில் வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் வெளிவந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்திருக்கிறது. இதற்கு ஆதரவாக தலைவர் ராகுல்காந்தியும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான போராட்ட திட்டங்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளன.

எனவே, தமிழகத்தில் நீண்டகாலமாக உருவான நீட் தேர்வு எதிர்ப்பு இன்று தேசிய அளவில் விரிவு பெற்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் நீட் தேர்வு குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்கிற தலைவர் ராகுல்காந்தியின் கருத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளே முடிவு செய்கிற உரிமை வழங்க வேண்டுமென ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5 தமிழக காங்கிரஸ் வலிமை பெற செயல் திட்டம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த உரிய செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது நமது கடமையாகும். கடந்த காலங்களில் கூட்டணியின் மூலமாக போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வருகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி பெறுகிற அதேநேரத்தில் இயக்கத்தை அடிமட்டத்திலிருந்து கட்டமைப்பதிலும் வெற்றி பெற வேண்டும். பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கென்று தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதை விரிவுபடுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலையிலும் செயல்படுகிற அமைப்பாக முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். செயல்படாத கட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

முதற்கட்டமாக மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம, வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸ் அமைப்புகளை உருவாக்குவதற்கான தீவிரமான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். இதன்படி கட்சியை பலப்படுத்துவதற்கும், கட்சியினரோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான பணிகளையும் உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் வலிமை பெறுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. கருத்தியல் ரீதியாக வகுப்புவாத அரசியலை முறியடிக்க நமது பரப்புரையை அனைத்து நிலைகளிலும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் எப்போதும் வகுப்புவாத அரசியலுக்கு வரவேற்பு இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சி 1989 இல் தனித்து போட்டியிட்ட போது பெற்ற 20 சதவிகித வாக்குகளை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத எந்த கட்சியும் பெற்றதில்லை, பெறவும் முடியாது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி உறுதிபடுத்த வேண்டும்.

எந்த அரசியல் கட்சிக்கும் கிடைப்பதற்கு அரிய தலைவராக ராகுல்காந்தி அவர்களை நாம் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமைபெற வேண்டும் என்று 13 முறை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் மறைந்த தலைவர் ராஜிவ்காந்தி. அதைப்போலவே தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் தலைவர் ராகுல்காந்தி மிகுந்த அக்கறையோடு இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது தமிழக கனவு மெய்ப்படுகிற வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து வலிமைப்படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவரது முயற்சிகள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 6 - தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கு: நரேந்திர மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ஜல்சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சராக வி. சோமன்னா பதவியேற்றிருப்பது காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இக்கூட்டம் கருதுகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற கர்நாடகத்தைச் சேர்ந்த வி. சோமன்னா அவர்களை ஜல்சக்தி பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதை மீட்பதற்காக நடுவர் மன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையத்தையும் நாட வேண்டிய நிலை உள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அமராவதி அணையின் நீர் ஆதாரமாக சிலந்தை ஆறு உள்ளது. சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்து விடும். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படுகிற அபாயம் இருப்பதாக கூறி தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அப்போது சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய வனவிலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதியை பெறாமல் தடுப்பணையை கட்டக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையை நிறைவேற்றுகிற வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதேபோல, முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் புதிய அணை கட்டுகிற முயற்சியை தடுக்கிற வகையில் தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7 - குழு தலைவர்: ஜூன் 6, 2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள் மூலமாக அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது. அதே கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இந்த மாநில பொதுக்குழு கூட்டம் வாயிலாக தலைவர் ராகுல் காந்தியை மட்டுமே நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கும், காரிய கமிட்டிக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகின்றோம்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+