தமிழகத்தில் வெள்ளம் வடிய சற்றே ஓய்வெடுத்த மழை... ஓடிசா கரையை 4ஆம் தேதி நெருங்கும் புயல்
தமிழகம் முழுவதும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும் அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்க கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 15 நாட்களுக்கும் மேலாக இருப்பளவு தண்ணீரில் மக்கள் பலர் சிரமத்தோடு வாழ்ந்து வருகின்றனர். வெள்ளம் வடியட்டும் என்று மழை சற்றே ஓய்வெடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிக்கும் தமிழ்நாடு.. அந்தமான் கடலில் உருவாகும் புயல் சின்னம்.. எங்கே தாக்கும்? எப்போது தாக்கும்?
மிதமான மழைக்கு வாய்ப்பு
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்களில் கனமழை
4 மற்றும் 5ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஓரிரு இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசியில் 9 செமீ
கடந்த 24 மணி நேரத்தில் வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) 9 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) 7, திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்), வீரபாண்டி (தேனி மாவட்டம்), காட்பாடி (வேலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) தலா 5, சிவகாசி (விருதுநகர் மாவட்டம்), அம்முண்டி (வேலூர் மாவட்டம்), கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்), பவானி (ஈரோடு மாவட்டம்) தலா 4, சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்), சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்), உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம் மாவட்டம்), பெரியகுளம் (தேனி மாவட்டம்), குன்னூர் (நீலகிரி மாவட்டம்), காவேரிப்பாக்கம் (மாவட்டம் ராணிப்பேட்டை), பொன்னை அணை (வேலூர் மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), எமரலாடு (நீலகிரி மாவட்டம்), செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) தலா 3 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் 4ல் புயல்
தற்பொழுது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்க கூடும்.
ஆந்திரா ஓடிசா கடலோர பகுதிகள்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் 3ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா மற்றும் ஓடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Recommended Video
கரையைக் கடக்கும் புயல்
04.12.2021: வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திரா , ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.