உபி ஜான்சி டூ சென்னை மைலாப்பூர்.. ஒரே போன் காலில் 4.15 கோடி சம்பாத்தியம்.. இறுதியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஸ்ரீவத்சன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது பெயர் சிம் வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிம் பயன்படுத்துபவர் சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாகவும் மும்பையில் இருந்து போலீஸ் பேசுவதாக ஒருவர் கூறியிருக்கிறார். அத்துடன் மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், சென்னை வந்து கைது செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். அப்படி மிரட்டி ரூ.4.15 கோடியை அபகரித்த போலி போலீஸ் அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டார்.
இன்றைக்கு டிஜிட்டல் கைது என்று ஒன்று இல்லவே இல்லை என்றாலும், அதனை சொல்லி ஏமாற்றி பணம் பறிப்பது அதிகமாகிவிட்டது. சிம் கார்டு அல்லது பார்சல் அல்லது ஏதேனும் ஒரு பொய்யை கூறி, சட்ட விரோத செயல் நடந்துள்ளதாகவும், போலீஸ் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மிரட்டுகிறார்கள். மேலும் நேரில் வந்து கைது செய்வோம் என்றும், அவர்களின் குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டுகிறார்கள்.

இதனை உண்மை என்று நம்பும் வகையில் அழைப்புகள் இருக்கும். இதனை கண்டு பயந்தவர்களிடம், ஒன்றும் பயப்பட வேண்டாம், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள்..ஆய்வுக்கு பின்னர் திரும்ப அனுப்பிவிடுவோம் என்று கூறுவார்கள். இதனை நம்பி பணத்தை தருபவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 73 வயதாகும் ஸ்ரீவத்சன் என்பவர் தனியார் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். இவருக்கு கடந்த செப்டம்பர் 26-ந்தேதி அன்று 'வாட்ஸ்-அப்' மூலம் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த தகவலில் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட செல்போன் 'சிம்கார்டு' சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், உங்கள் மீது மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள் என்றும், விரைவில் உங்களை கைது செய்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை பார்த்து ஸ்ரீவத்சன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மும்பையில் இருந்து 'சைபர் கிரைம்' அதிகாரி பேசுவது போன்று பேசி, நீங்கள் மும்பை 'சைபர் கிரைம்' போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் சென்னை வந்து உங்களை கைது செய்வோம் என்று மர்ம நபர் ஒருவர் பேசினாராம். பின்னர் அதே மர்ம நபர் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய உள்ளது என்றும், அந்த பணத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆய்வு முடிந்ததும் உங்கள் பணம் திருப்பி தரப்படும் என்றும் கூறினாராம்.
அந்த மர்ம நபரின் பேச்சை உண்மை என்று நம்பி ஸ்ரீவத்சன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.15 கோடியை மர்ம நபர் சொன்ன வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் அனுப்பியிருக்கிறார். ஸ்ரீவத்சன் அனுப்பி வைத்த ரூ.4.15 கோடி பணமும் அபகரிக்கப்பட்டது. அதன்பிறகு மும்பையில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுவது போன்று யாரும் பேசவில்லை என்பது அவருக்கு தெரியவந்தது. அத்துடன் மும்பை சைபர் கிரைமில் நேரடியாக பேசிய பின்னர் அவருக்கு ஏமாற்றப்பட்ட விவகாரம் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீவத்சன், இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். கமிஷனர் அருண் உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மும்பை போலீஸ் அதிகாரி போல் பேசிய நபர் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. சென்னையில் இருந்து 'சைபர் கிரைம்' தனிப்படை போலீசார் உத்தரபிரதேச மாநிலத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
ஸ்ரீவத்சனிடம் மும்பை போலீஸ் அதிகாரிபோல் பேசி மோசடியில் ஈடுபட்ட நபரின் பெயர் மணீஷ்குமார் (23) என்பது அவர்களுக்கு தெரியவந்தது. மணீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்து 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்தார்கள். அவர் இதுபோல ஏராளமானவர்களிடம் பேசி பணத்தை அபகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற தகவலை நம்பி பொதுமக்கள் பணத்தை தரக்கூடாது. யாராவது பணம் அனுப்புமாறு மிரட்டினால் போலீசில் புகார் அளிக்கலாம். இதுபற்றி மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications