பெண் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்.. ஸ்கூட்டியில் போனவருக்கு எமனாக வந்த பைக் ரேஸ் இளைஞர்கள்!
சென்னை : சென்னை வண்டலூர் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதில், ஸ்கூட்டரில் சென்ற ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் பரிதாபமாக பலியானார்.
ரேஸ் பைக் ஸ்கூட்டர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட செல்வகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ரேஸால் அநியாயமாக பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி பெண்ணின் மரணத்திற்கு காரணமான ரேஸ் பைக் இளைஞர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணை கைதி மரணம் “திமுக ஆட்சியில் லாக்கப் டெத்- இன்று கொடுங்கையூர்.. நாளை?” பாய்ந்து வந்த எச்.ராஜா
பைக் ரேஸ்
பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் பைக் ரேஸ் நடத்தக் கூடாது என அரசும், காவல்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், சென்னையில் வார இறுதி நாட்களில் பைக் ரேஸ் நடந்து வருவது தொடர்கிறது. இந்நிலையில் இன்று சென்னை வண்டலூர் அருகே பைக் ரேஸ் வாலிபர்களால் அப்பாவிப் பெண்மணி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கூச்சலிட்டு அச்சுறுத்தல்
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று காலை 60 வயது பெண்மணி ஒருவர் ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியே பைக் ரேஸ் வாலிபர்கள் மின்னல் வேகத்தில் ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் சீறிப் பாய்ந்துள்ளனர். சில வாலிபர்கள், மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டபடி பைக் ரேஸில் ஈடுபட்டிள்ளனர். இதி்ல் வாலிபர் ஒருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பெண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியது.
தூக்கி வீசப்பட்ட பெண்
இதில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண்மணி சாலையோர தடுப்பில் மோதி விழுந்தார். அவர் பறந்து விழுந்த வேகத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டும் கழன்று ஓடியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ரேஸில் ஈடுபட்ட வாலிபரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரேஸ் இளைஞர்கள்
மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பது தெரியவந்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஸ்வா தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரேஸில் ஈடுபட்டபோது இந்த விபரீதம் நடந்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்ட மற்ற நண்பர்கள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பலியான ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர்
பலியான பெண்மணி வைத்திருந்த கைப்பையில் போலீஸ் கேண்டீன் ஐடி கார்டு ஒன்று இருந்தது. அதில் காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போலீசார் விசாரித்ததில் உயிரிழந்த பெண்மணி அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என்பதும், அவர் தனது தோழியை பார்த்துவிட்டு, வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சீறி வந்த ரேஸ் இளைஞனால் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.