திமுக ஆட்சிக்கு வந்தாலே வருவாய் பற்றாக்குறை தான்... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பாய்ச்சல்
சென்னை: சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடுவே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையில் இன்றுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று, பட்ஜெட் குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
அப்போது சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், மு.க. ஸ்டாலின் இடையே காரசார வாதம் நடந்தது. திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போதெல்லாம் வருவாய் பற்றாக்குறையாகத்தான் இருந்தது. தமிழக பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் அல்ல என்றும் எதிர்க்கட்சித்தலைவர் பட்ஜெட்டை வெறுப்பு கண்ணாடி போட்டு பார்த்துள்ளார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
உடனே குறுக்கிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், நீங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தார். அதற்கு பதில் அளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், எந்த நோக்கத்திற்காக அந்த சம்பவம் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சட்டசபையில் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழக மக்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம் என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார்.
பிப்ரவரி 8 ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம், 2 புதிய மாநகராட்சிகள் உள்ளிட்டமசோதாக்கள் குரல் வாக்குகெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ரூ.2000 சிறப்பு நிதி குறித்த துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பதிவில் திருப்தி இல்லாததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.