மரங்களை வெட்ட அனுமதி ரத்து.. கேரள அரசின் மிகப்பெரும் சதி அம்பலம்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது. இதனை தொடர்ந்து
பேபி அணை பகுதியில் இருந்த மரங்களை வெட்ட கேரள மாநில வனத்துறையினர் தமிழக அரசுக்கு அனுமதி அளித்திருந்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும், வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையைச் சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்குமாறும் முக்கியமான கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

கேரளா திடீர் மறுப்பு
ஆனால் பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள மாநில அரசு திடீரென அனுமதியை ரத்து செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேரள மாநில வனத்துறை அமைச்சர் சசீந்திரன் உறுதி செய்தார். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்த கேரள அரசை கண்டிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளதாவது:-

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது
முல்லைப்பெரியாற்று அணையின் ஒரு பகுதியான பேபி அணையை வலுப்படுத்துவதற்காக அதற்கு அருகில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை கேரள அரசு ரத்து செய்திருக்கிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது; கண்டிக்கத்தக்கது!

இது நியாயமல்ல
முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என 2006-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு 2014-ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அணையை இன்னும் வலுப்படுத்த முடியாததற்கு அங்குள்ள மரங்கள் தான் காரணம்! பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு கடந்த ஆண்டே ஆணையிட்டும், அனுமதி வழங்க கேரள அரசு மறுப்பது நியாயமல்ல.

அனுமதிக்க வேண்டும்
இது அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுப்பதற்கான சதி! பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்க கேரள அரசு மறுத்தால், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும்!












Click it and Unblock the Notifications