டெல்லி அஜன்டாவா? ஆளுநர் பதவி ஜஸ்ட் இவ்வளவு தான் தெரிஞ்சுக்கோங்க! ஆர்என் ரவியை சீண்டிய பிசி ஸ்ரீராம்
சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவி பேசி வரும் நிலையில் அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் திரைப்பட ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, ஆளுநருக்கான அதிகாரத்தை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என பாடமெடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்என் ரவிக்கும், ஆளும் திமுகவுக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளன. திராவிடம் பேசும் திமுகவை ஆர்என் ரவி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் விமர்சனம் செய்து வருகிறார். திராவிடம் என்று ஒன்று இல்லவே இல்லை என அவர் மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறார். அதோடு சனாதானம் குறித்தும் ஆர்என் ரவி எடுத்துரைத்து வருகிறார்.

இதற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆர்என் ரவி சனாதான தர்மத்தை தூக்கி பிடித்து ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என தடாலடி கருத்துகளை எதிர்ப்பாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றார். அங்கு பல தொழில் நிறுவன அதிகாரிகளை அவர் சந்தித்து பேசினார். அதன்பிறகு சென்னை திரும்பிய ஸ்டாலின், ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என கூறினார்.
இதன் தொடர்ச்சியாக தான் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்என் ரவி தொழில் முதலீடுகள் பற்றி பேசினார். முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் சென்று வந்த நிலையில் அவரது இந்த பேச்சு என்பது நேரடியாக முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பது போல் இருந்தது. அதாவது ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛ சீனாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் அங்கிருந்து மாறி இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுள்ள நாடாக பார்க்கின்றனர். கடந்த பத்தாண்டு வளர்ச்சி தான் இதற்கு காரணம். வெளிநாடு சென்று பேசுவதாலோ, நாம் கேட்டுக் கொண்டதாலோ தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துவிடாது. அவர்கள் பேரம் பேசுவார்கள்.
நம் நாட்டில் அதை செய்யும் பல மாநிலங்கள் உள்ளன. சிறிய மாநிலமான ஹரியானாவில் நமது மாநிலத்திற்கு இணையான அந்நிய நேரடி முதலீடு உள்ளது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான அத்தியாவசிய தேவை, திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதாகும். அப்போதுதான் இந்த வாய்ப்பை நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள முடியும்'' என்றார். இந்த பேச்சு மூலம் மீண்டும் ஆளுநர் ஆர்என் ரவி திமுக மற்றும் அதனை தோழமை கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்தார்.
இந்நிலையில் தான் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஆர்என் ரவி, அவர் ஆளுநரா அல்லது அரசியல்வாதியா. டெல்லியில் உள்ள தனது முதலாளிகளின் அஜென்டாவுடன் இங்கு இருக்கிறாரா?, தான் ஒரு சடங்குகளுக்கான தலைவர் என்பதை இப்போது அறிந்து அவர் பணியாற்ற வேண்டும்'' என கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆளுநர் என்பவர் பதவி பிரமாணம் உள்ளிட்ட சடங்குகளுக்கான தலைவர் மட்டுமே என்பதை இப்போது புரிந்து கொள்ள வேண்டும் என பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications