பதவிக்காலம் நீட்டிப்பு இழுபறி! டெல்லி பறக்கிறார் ஆர்.என்.ரவி.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், பதவி நீடிப்பு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணிக்கிறார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவின் செயல்பாடுகள், மாநில அரசால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டின் தொடக்கத்தில் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரை வாசிக்கப்படும். இதனை மாநில அரசுதான் தயார்படுத்தி கொடுக்கும். இந்த உரை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே வாசிப்பதற்காக வழங்கப்படும்.

இப்படி ஒப்புதல் அளித்த உரையையே இந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. கடந்த ஆண்டு சில முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு உரையை வாசித்தார். இது தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கை ஏற்படுத்தியது. இது தவிர, திருக்குறள், ஜியு.போப், கார்ல் மார்க்ஸ், திராவிட மாடல் என பல்வேறு விஷயங்களில் ஆளுநரின் கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அன்றைய தினம் சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்கு தமிழ்நாடு ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறியிருந்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது,
"இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என்று கூறியிருந்தார்.
ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, கோயில் தலைமை பூசாரி இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதில், எங்களுக்கு எந்த அச்ச உணர்வும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் ஆளுநரின் பேச்சு குறித்த நம்பகத்தன்மை மீது பகிரங்கமாக கேள்வி எழுப்பியது.
மறுபுறம் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், இதற்காக விளக்கத்தை மாணவர்களுடன் நடக்கும் கலந்துரையாடலில் கொடுப்பதும் ஆளுநர் மீதான விமர்சனங்களை மேலும் கூர்மையடைய செய்தது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. பதவிக்காலம் நிறைவடைந்து ஏறத்தாழ 20 நாட்கள் ஆன நிலையில், இதுவரை பதவி நீடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனவே ஆளுநரின் அரசியல் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று ஆளுநர் டெல்லி பயணிக்கிறார். இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது பதவிக்காலம் நீடிப்பு குறித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஆர்.என்.ரவி ஏற்கெனவே பாதுகாப்பு சார்ந்த துறையில் பணியாற்றியிருந்ததால், மீண்டும் அதே துறைக்கு தன்னை மத்திய அரசு அழைத்துக்கொள்ள வேண்டும் என்று ரவி கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை டெல்லி செல்லும் அவர், வரும் 21ம் தேதி தமிழகம் திரும்ப இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications