ரூட் தல பிரச்சினை.. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்.. 8 பட்டாக்கத்திகள் பறிமுதல்
சென்னை: ரூட்டு தல விவகாரத்தில், சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் குழு பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி நுழைவுவாயில் அருகே ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மோதலில் ஈடுபட்டனர். கற்களை கொண்டும் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

பச்சையப்பன் கல்லூரி
மேலும் பச்சையப்பன் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். காவல் துறையினர் வருவதை பார்த்த அந்த மாணவர்கள் அந்த பகுதியிலிருந்து ஓடினர். கற்களால் தாக்கியதில் ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

பூந்தமல்லி பச்சையப்பன் கல்லூரி
முதற்கட்ட விசாரணையில் பூந்தமல்லியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் திருத்தணியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பூந்தமல்லியில் இருந்து வருபவர்கள் பேருந்து மூலமாகவும் திருத்தணியிலிருந்து வருபவர்கள் ரயில் மூலமாகவும் கல்லூரிக்கு வருபவர்கள்.

மாணவர்களிடையே மோதல்
இந்த இரு மார்க்கம் மூலமாக வரும் மாணவர்களிடையே ஏன் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல், சிசிடிவி மற்றும் காவல் துறை எடுத்த வீடியோ பதிவுகளில் உள்ளதால், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை தயாரித்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதில் சுவரில் 8 பட்டாக்கத்தி
குறிப்பாக கல்லூரி மதில் சுவர் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பின்புறம் 8 பட்டாக்கத்திகளையும் பல காலி மதுபாட்டில்களையும் தாக்குதல் நடத்துவதற்காக மாணவர்கள் பதுக்கி வைத்திருந்தது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் கல்லூரி பைகளை வீசி எறிந்தனர். அதை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த பையில் கத்தி, பட்டாகத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் இருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications