“காவி உடை திருவள்ளுவர்”.. எடப்பாடி பகிர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.. உடனே போட்டோ நீக்கம்!
சென்னை: உலக தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டிருந்தார். அதில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியின் அந்தப் பதிவு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
தாய்மொழியின் சிறப்பைப் போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நம் உயிருக்கு நேராம்,
சமூகத்தின் விளைவுக்கு நீராம்,
உரிமைச் செம்பயிருக்கு வேராம்,
உயர்வுக்கு வானாம்,
பிறவிக்குத் தாயாம்,
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன். தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவோடு, ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதில், தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் இடம்பெற்றிருந்த திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காவி உடை திருவள்ளுவர் படத்தை பகிர்ந்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அந்தப் படத்தை நீக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications