பாஜக பாலச்சந்தருடன் முன்விரோதம்..ஜெயிலில் இருந்து வெளியே வந்து சபதம் போட்டு கதையை முடித்த ரவுடிகள்!
சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தருடன் முன்விரோதம் இருந்ததன் காரணமாக சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள் சபதம் போட்டு கொலை செய்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பாஜக பிரமுகர் பாலச்சந்தர் சிந்ததாரிப்பேட்டையில் நேற்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாலசந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படுகொலைக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாஜி ரவுடி- மாட்டு தலை மூலம் மத கலவர முயற்சி-சென்னையில் கொல்லப்பட்ட பாஜக பாலச்சந்தரின் ஷாக் பின்னணி
ரவுடிகள் மீது வழக்கு
இந்த நிலையில் இப்படுகொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாலச்சந்தரின் உறவினர்களும் 5 ரவுடிகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். இதனடிப்படையில் அப்பகுதி ரவுடிகள் பிரதீப், சஞ்சய், கலைவாணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, இந்து மக்கள் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவர் பாலசந்தர். 2019-ம் ஆண்டு வரை சிந்ததாரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இருந்தவர்தான் பாலச்சந்தர். பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பும் பெற்றார்.
ரவுடிகளுடன் மோதல்
இந்து மக்கள் கட்சியில் இருக்கும் போது போலீஸ் பாதுகாப்புக்காக சில நாடகங்களை நடத்தியவர் பாலச்சந்தர். போலீசார் பாதுகாப்பு கிடைத்தவுடன் தமக்கு எதுவும் நடக்காது என நினைத்து உள்ளூர் ரவுடிகளுடன் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தாராம் பாலச்சந்தர். இதனால் அப்பகுதி ரவுடிகள் சிலர் சிறைக்கு செல்லவும் காரணமாக இருந்திருக்கிறார் பாலச்சந்தர்.
ஸ்கெட்ச் போட்டு கொலை
அப்படி சிறைக்கு போனவர்களில் பிரதீப் என்ற ரவுடியும் ஒருவர். பிரதீப் சிறையில் இருந்து வெளியே வந்த உடன் இதர கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலச்சந்தரை 5 நாளில் போட்டுத் தள்ளுவோம் என சபதமெடுத்தனராம். இதற்காக ஸ்ட்கெட்ச் போட்டும் காத்திருந்தனராம். இதனடிப்படையில்தான் சிந்ததாரிப்பேட்டையில் நேற்று இரவு பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்டார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.