ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்திய ரவுடி ஹரிஹரன்! செல்போன் ஆதாரத்தால் ட்விஸ்ட்
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த வழக்கறிஞர் ஹரிஹரன் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கிற்கு வந்ததாக போலீஸார் விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவருடைய வீடு இருக்கும் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் கொல்லப்பட்டார். அவர் கட்டி வரும் புதிய வீட்டை ஆய்வு செய்ய வந்த போது இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்தது.

ஆம்ஸ்ட்ராங்கின் தலை, கணுக்கால்களில் வெட்டினால் ரத்தம் அதிகம் வெளியேறி அவரால் தப்பிக்க முடியாது என்பதற்காக ரவுடிகள் அவரை ரத்த நாளங்கள் இருக்கும் நரம்புகளில் வெட்டினர். இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பட்டினம்பாக்கத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கருதியதால் இந்த கொலைக்கு பழிக்கு பழித்தீர்க்க திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 5 வழக்கறிஞர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் போலீஸாரை தாக்கி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்ற போது அவரை என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் வெட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் மிகவும் கொடூரமான முறையில் ஏதோ இறைச்சியை வெட்டுவது போல் சதக் சதக் என வெட்டிய காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. இந்த வழக்குத் தொடர்பாக தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா, சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சம்பவம் செந்தில் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் சென்னை எழும்பூர் 13 ஆவது நீதிமன்ற நீதிபதி தர்மராஜ், முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை வரும் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான ஹரிஹரன் குறித்து சில தகவல்கள் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திட்டம் தீட்டி கொடுத்தது ஹரிஹரன் தானாம். இவர் சம்பவம் செந்திலின் கூட்டாளி. இவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே தொழில் போட்டி இருந்ததாம். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தாராம்.
ஆனால் ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி இருப்பதாலும் அவரை சுற்றி எப்போதுமே 10 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இருப்பதாலும் ஹரிஹரனால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நெருங்க முடியவில்லையாம்.
இதனால் இவர்தான் எல்லா ரவடிகளையும் மூளைச் சலவை செய்து ஒருங்கிணைத்துள்ளார். ஒரு பக்கம் ரவுடி சம்பவம் செந்தில், ஹரிஹரனுக்கு ஆலோசனைகளை வழங்கியதில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார்.
தன் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக திருச்சியில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டத்திற்கும் சென்ற ஹரிஹரன், ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கிலும் பங்கேற்றுள்ளார். அண்மையில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து கைப்பற்ற செல்போனில் இருந்த சிம் கார்டுகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள எண்களை கண்டுபிடித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முடிவுக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications