ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டம் என்றாலே அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
சென்னை: ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (மார்ச் 17) போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இன்று காலை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன்று முற்றுகையிடுவதற்குச் செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?.
திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications