ரூ 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு புகார்! தமிழக பட்ஜெட் உரையின் போது அமளி! அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: 2025- 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டிருந்தனர்.
2025- 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முன்னதாக சட்டசபை கூடுவதற்கு முன்பே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சட்டசபை கூடியதுமே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் அப்பாவு எவ்வளவோ முயற்சித்தனர். இந்த அமளிக்கு நடுவே தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதிமுக எம்எல்ஏ வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் டாஸ்மாக்கில் ரூ 1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து தொடர்பான டெண்டர், மதுபான கூடத்துக்கு உரிமம் வழங்குவது ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்களே இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் தமிழக அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கு , அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்என்ஜெ, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அதன் ஆலைகள் என சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது டாஸ்மாக்கில் ரூ 1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டகார அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ரூ 10 முதல் ரூ 30 வரை கூடுதலாக பணம் வசூலித்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.
பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்களே இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக பாட்டில்கள் விற்றதாக ஆலைகளிடம் இருந்து அதிக பணத்தை பெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு கமிஷன் தொகை அனுப்பிவிட்டு எஞ்சிய தொகையை ஆலைகளுக்கே திருப்பி அனுப்புகின்றன. இதன் மூலம் கணக்கில் வராத பெரும் தொகை உருவாகிக் கொண்டே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் தேவையை விட அதிக அளவுக்கு ஆர்டர் கொடுத்தது, தேவையற்ற சலுகைகளை வழங்கியது போன்றவை மூலம் மதுபான உற்பத்தி ஆலைகளுடன் டாஸ்மாக் அதிகாரிகள் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது என அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications