கேரளாவில் ஒரே போராட்டம்.. வெளியேரும் நிறுவனங்கள்.. தமிழ்நாடு வரும் ரூ.300 கோடி ஏற்றுமதி முதலீடு!
சென்னை: தொழிற்சங்கத்தினரின் போரட்டத்தால் முடங்கிய நிலையில் கேரளாவின் கொச்சியை சேர்ந்த அர்ஜூனா நேட்சுரல் எனும் மூலிகை பொருள் ஏற்றுமதி நிறுவனம் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை
இந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் தொழில் கொள்கைகள் அங்கு தொழில் செய்ய உகந்ததாக இல்லை என பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன.
தொழில் செய்ய பயம்
இதனால் கேரளாவில் தொழில் செய்ய நிறுவனங்கள் பயப்படுகின்றன. மேலும் கேரளாவுக்கு செல்ல வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்கின்றன. முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான கைடெக்ஸ் கார்மென்ட்ஸ் நிறுவனம் கேரளாவில் மெகா ஆலை அமைக்க திட்டமிட்டது. பிறகு இந்த முடிவை கைவிட்ட நிறுவனம் ஆலையை தமிழகத்தில் நிறுவ முடிவு செய்துள்ளது.
மூலிகை நிறுவனம்
இதன் தொடர்ச்சியாக மற்றொரு நிறுவனமான அர்ஜுனா நேட்சுரல்சும் தொழிற்சங்க பிரச்னையினால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர யோசனை செய்து வருகிறது. அதாவது கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு அர்ஜூனா நேட்சுரல் என்ற மூலிகைப் பொருள் ஏற்றுமதி நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது. ரூ.300 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் திறன் கொண்ட இந்த நிறுவனம் 250 பேருக்கு நேரடியாக வேலை வழங்குகிறது.
போராட்டத்தால் முடக்கம்
இந்த நிறுவனத்தின் எர்ணாகுளம் பகுதி தொழிற்சாலை தற்போது முடங்கியுள்ளது. சங்பரிவார் அமைப்பை சேர்ந்த பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் தொழிற்சங்கத்தினர் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொழிற்சாலை பணிகள் முடங்கியுள்ளன. மேலும் தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொருட்களும் தேக்கமடைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையை அங்கிருந்து மாற்றம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்துக்கு மாற்ற முடிவு
அதன்படி கேரளாவிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டிற்கு நிறுவனத்தை மாற்றுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே கோவை, ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு நிறுவனத்தை கொண்டு வந்து இயக்குவதில் சிரமம் இருக்காது என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தத்துக்கான காரணம்
முன்னதாக அர்ஜுனா நெட்சுரல்ஸ் நிறுவனம் தொழிற்சாலையில் உள்ள நான்கு பிரிவுகளில் மூன்றை மூடி, ஒன்பது தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றியுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தக விதிகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே நிறுவனம் பிரிவுகளை மூடி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்ட்து. இருப்பினும் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் களமிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கம் உள்ளதாக நிறுவனத்தின் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. இதில் ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை
இந்த தொழிற்சாலையை எந்த வித சிக்கலும் இல்லாமல் செயல்பட அரசு அனைத்து பாதுகாப்பையும் வழங்கும் என கேரளா தொழில் அமைச்சர் பி ராஜிவி உறுதியளித்துள்ளார். மேலும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலைக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடர்ந்து தொழிற்சாலை முடங்கி உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தொழிற்சாலை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.