தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதால் ரூ.446 கோடி சேமிப்பு.. அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 43.61 லட்சம் தெரு விளக்குகளில், தற்போது வரை 23.63 லட்சம் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு உள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.
இதன் மூலம் மொத்தம் ரூ.446 கோடி மதிப்பிலான மின்சாரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மீதமுள்ள விளக்குகளையும், எல்இடி விளக்குகளாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 513, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,844, பேரூராட்சிகளில் 1,725 ஊரக பகுதிகளில் 3,022 என மொத்தம் 7,104 உயர்மின் கோபுர விளக்குகள் பராமரிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை மாநகராட்சியில் 2,85,828, பிற மாநகராட்சிகளில் 3,22,320, நகராட்சிகளில் 3,98,141, பேரூராட்சிகளில் 4,41,664, ஊரக பகுதிகள் 29,13,673 என மொத்தம் 43,61,626 தெருவிளக்குகள் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி சென்னை மற்றும் பிற மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 23,63 லட்சம் தெருவிளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார் .
பின்னர் தெருவிளக்குகள் தொடர்பாக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கேள்வி எழுப்பினார். நல்லாவடி கிராமம் மற்றும் திசையன்விளை உவரி சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார்.
அதற்கு அப்பகுதியின் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவைக்கேற்ப எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உயர் கோபுர விளக்குகள் எம்பி நிதியில் தான் அமைக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, எம்எல்ஏ-க்களின் நிதியிலும் அமைக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படுமா என எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி, வரும் காலங்களில் எம்எல்ஏக்கள் நிதியின் மூலம் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications