ரூ.500 லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு செம ஆப்பு.. ஒரு வருடம் சிறை.. சென்னை நீதிமன்றம் அதிரடி
சென்னை: போலீஸ் கான்ஸ்டபிளிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலக கணக்காளர்க்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலாக பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றை கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், இந்த தொகையை அனுமதிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். செல்வம் தன்னிடம் பணம் இல்லை கூறியதால், முன்பணமாக 500 ரூபாய் கொடுக்கும்படியும், சம்பள நிலுவை தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை அனுமதித்த பின்பு மீதமுள்ள தொகையை கொடுக்கும்படியும் புருஷோத்தமன் கூறி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையின் அறிவுரைப்படி செல்வம், லஞ்சப்பணம் 500 ரூபாய் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ் அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட புருஷோத்தமனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications