அதலபாதாளத்தில் ரூபாய் மதிப்பு.. ஆனால் எந்த முயற்சியும் எடுக்கல! நிர்மலா சீதாராமனை சாடிய ப.சிதம்பரம்
சென்னை: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவில் திட்டங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "அரசாங்கமும் நிதியமைச்சரும் 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையை வாசித்தார்களா என்றே எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை வாசித்திருந்தால், அதை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, மக்களுக்குப் புரியாத வார்த்தைகளை வழக்கம்போல சுருக்கப் பெயர்களை வீசுவதையே தங்களின் விருப்பமான பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர் என்று தோன்றுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையும் பல துறை வல்லுநர்களும் சுட்டிக்காட்டிய குறைந்தது 10 சவால்களை என்னால் பட்டியலிட முடியும். அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரி விதிப்புகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடு குறித்த நிச்சயமற்ற சூழலும், கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடுகளும் கவலையளிக்கின்றன.
நிதியமைச்சரின் உரையில் இவை எதற்குமே தீர்வு காணப்படவில்லை. எனவே, அந்த உரைக்குக் கிடைத்த கைதட்டல்கள் ஏனோ தானோ என்று இருந்ததிலும், பெரும்பாலான பார்வையாளர்கள் விரைவாகவே அதிலிருந்து விலகியதிலும் ஆச்சரியமில்லை. சன்சத் டிவி ஒளிபரப்பு கூட சில முறை துண்டிக்கப்பட்டது. ஒரு கணக்காளரின் தரத்தைக் கொண்டு அளவிட்டால் கூட, 2025-26 நிதியாண்டின் நிதி மேலாண்மை குறித்த மிக மோசமான அறிக்கையாகவே இது உள்ளது" என்று விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications