சனாதன ஒழிப்பு - அமைச்சர் உதயநிதியுடன் ஆளுநர் ரவி பகிரங்க மோதல்- இந்தியாவை உடைக்க சதியாம்!
சென்னை: சனாதன தர்மத்தை ஒழிப்பது என்பது 'இந்தியா'வை மீண்டும் உடைப்பது என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனித குலத்துக்கு விரோதமான சனாதன தர்மத்தை ஒழித்தாக வேண்டும்; சனாதன தர்மத்தை எதிர்ப்பது மட்டுமல்ல ஒழிப்பதும் அவசியம்; டெங்கு, மலேரியா, காலரா போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய தூண்டும் பேச்சு என கிளப்பிவிட்டனர் பாஜக தலைவர்.
பிரதமர் மோடி கண்டனம்: இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டின் பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையைக் கூட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலடி தரக் கூறினார். பிரதமர் மோடியும் மத்திய பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் உதயநிதிக்கு பதில் கொடுத்தார்.
உதயநிதிக்கு குவிந்த கண்டனங்கள்: மேலும் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. உ.பி, மகாராஷ்டிரா மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உதயநிதியின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு என உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இன்றளவும் வட இந்தியாவில் ஏதோ ஒருவகையில் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சுக்கு பாஜக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது.
சனாதன ஒழிப்பில் உதயநிதி உறுதி: ஆனால் இப்போதும் சனாதன தர்மத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்கிறார் அமைச்சர் உதயநிதி. புதிய நாடாளுமன்றத்துக்கு நடிகைகளை அழைக்கிற மத்திய அரசு, கணவரை இழந்த பழங்குடி பெண்ணாகிய ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்க மறுப்பதுதான் சனாதன தர்மம் எனவும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்.
ஆளுநருக்கு உதயநிதி பதிலடி: மேலும் தமிழ்நாட்டில் ஜாதிய பாகுபாடுகள் அதிகம் இருக்கிறது என அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி, ஜாதிய பாகுபாடுகளுக்கு காரணம் சனாதனம். அதனால்தான் சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்.

காஞ்சிபுரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி: இப்பின்னணியில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவின் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவின் மாணவர்களும் ஆசிரியர்களும், சனாதன தர்மத்தைப் பரப்புவதில் காஞ்சி மடத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருந்து தேசத்தை கட்டியெழுப்பவும், அமிர்தகாலத்தில் விஸ்வகுரு பாரதத்தை உருவாக்கவும் தங்களையே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பாரதத்தை உடைக்க சதி: மேலும், சனாதன தர்மம் நித்தியமானது, அனைத்தையும் உள்ளடக்கியது மற்றும் பாரதத்தின் ஆன்மா. தேசத்தின் எதிரிகள் அதை ஒழிக்க முயல்கின்றனர். மீண்டும் ஒருமுறை பாரதத்தை உடைப்பதே அவர்களின் மறைமுக செயல்திட்டம் என்றும் விமர்சித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஏற்றுக் கொண்ட ஜி20: அத்துடன் ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் சனாதன தர்மத்தின் முக்கிய சாரமான வசுதைவ குடும்பகத்தை உலகமே ஏற்றுக்கொண்டது எனவும் ஆளுநர் ரவி சுட்டிக்காட்டினார்.

காஞ்சிபுரம் வழிபாடு: காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலில் அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி வேண்டிக் கொண்டனர். ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி ஆகியோர் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications