சொன்னா சொன்னதுதான்.. மணல் குவாரியை உடனே திறக்க வேண்டும்.. லாரி ஓனர்கள் இன்று திருச்சியில் போராட்டம்
சென்னை: தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அவை அனைத்துமே மூடப்பட்டுவிட்டன.

பிறகு முழுமையாக ஆன்லைன் மூலமாக மணல் வழங்கப்பட்டது... இப்போது மணல் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டதால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கட்டுமானத் தொழில், லாரி தொழிலில் ஈடுபட்டு வரும் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஹைகோர்ட்: இதனிடையே, இந்த விவகாரத்தில் மதுரை ஹைகோர்ட்டில், ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்யக் கூடாது என்றும் பொதுப்பணித்துறையே ஆறுகளிலிருந்து நேரடியாக மணலை எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இந்த நிலையில், மணல் குவாரிகள் இதுவரை திறக்கப்படாததை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திருச்சியில் நடக்கிறது.
அறிவிப்பு: இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி அறிக்கை ஒன்றையும் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், "தமிழகத்தில் 55 ஆயிரம் மணல் லாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளும் இயக்கி வந்தன. இந்நிலையில், ஆற்றில் அளவிற்கு அதிகமாக மணல் அள்ளுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் எழுந்த புகாரின்பேரில், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு அரசு மணல் குவாரிகளை மூடினர்.
இதனால், மணல் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரிகளை திறந்து அரசே நேரிடையாக மணல் வழங்க வேண்டுமென மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இன்று போராட்டம்: ஆகஸ்ட் 9ம் தேதி திருச்சி திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறோம்.. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்க உள்ளனர்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications