தமிழகத்தையே உலுக்கிய சந்தியா கொலை வழக்கு.. ஜாமீனில் வெளியே வந்தார் கணவர்
சென்னை: தமிழகத்தையே உலுக்கிய சந்தியா கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவரது கணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த கொலையில் மிகவும் கொடூரமான, மாநிலத்தையே உலுக்கிய கொலைகளுள் துணை நடிகை சந்தியாவின் கொலையும் அடங்கும்.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் கை, கால்கள் மட்டும் கடந்த ஆண்டு பிப்.6-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என தெரியவந்தது. இவர் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
இவரது கணவர் பாலகிருஷ்ணன் இவர் காதல் இலவசம் என்ற தமிழ் படத்தை தயாரித்து இயக்கியவர். குடும்ப வறுமை காரணமாக 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சந்தியாவை பாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார்.
புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன்.. பயங்கரவாதி தகவல்
சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசி பழகக் கூடியவர் என்பதால் அவர் மீது பாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் அதிகரித்தது. சென்னையில் அவ்வப்போது சந்தியா வெளியே செல்வதை பாலகிருஷ்ணன் தடுத்துள்ளார். அப்படி ஒருமுறை வெளியே செல்ல முயன்றபோது சந்தியாவை 7 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசியுள்ளார்.
போலீஸார் விசாரணையில் சந்தியாவை எப்படி கொலை செய்தார், உடல் பாகங்களை எங்கே போட்டார் என்பது குறித்தெல்லாம் அவர் விளக்கினார். தலை பாகம் மட்டும் கிடைக்கவில்லை. தலை பகுதி கிடைக்காததால் சிக்கிய உடல் பாகங்கள் சந்தியாவுடையது என்பதை நிரூபிப்பது சிரமம் என போலீஸார் கருதினர்.
ஆனால் டிஎன்ஏ சோதனை மூலம் சிக்கிய பாகங்கள் சந்தியாவினுடையது என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். இந்த சோதனைகள் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் 90 நாட்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.