எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் வருவேன்... இனிமேல் பின்வாங்க மாட்டேன் - சசிகலா சபதம்
எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் வருவேன். இனிமேல் பின்வாங்க மாட்டேன் என்று சசிகலா பேசிய ஆடியோ ரிலீஸ் ஆகியுள்ளது.
சென்னை: கட்சிக்காரர் என்று ஒருவரை அமர வைத்து விட்டு சென்றேன் அவர் மாறினால் என்ன செய்வது என்று சசிகலா பேசியுள்ளார். எந்த எதிர்ப்பு வந்தாலும் தொண்டர்களுக்காக நான் வருவேன் என்று சசிகலா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 3வது இடத்தில் இருந்த அதிமுகவின் அந்தஸ்தை இழக்க வைத்து விட்டார்கள் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா உடன் பேசுபவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தீர்மானம் போடப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் சசிகலா உடன் பலரும் பேசி வருகின்றனர்.
இதுவரை 60க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. மதுரையைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரிடம் சசிலா பேசும் போது கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன் என்று கூறினார்.
ஆட்சி அமைப்போம்
1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம். இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம். நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் சசிகலா.
கவலையில் தொண்டர்கள்
சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் சரவணனிடம் சசிகலா பேசிய ஆடியோவில், அதிமுக தொண்டர்கள் கவலையாக உள்ளனர். நான் மீண்டும் வர வேண்டுமென தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார்.
நான் வருவேன்
தற்போது வெற்றி பெற்ற தொகுதிகள், ஏற்கனவே தலைவர் எம்ஜிஆர், அம்மா காலத்திலயே வென்றவை தான். தொண்டர்கள் என்னுடன் இருப்பதால் நிச்சயம் வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார். தனிநபர்கள் கட்சி நடத்துகின்றனர் என நான் நினைத்தேன். அதையே தொண்டர்களும் கூறுகின்றனர். இதனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் வருவேன். இனிமேல் பின்வாங்க மாட்டேன்.
அதிமுகவிற்கு வாக்களித்தனர்
என்னால் அம்மா ஆட்சி அமைவது கெட்டுபோகக் கூடாது என்பதற்காக ஒதுங்கியிருந்தேன். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. கோடான கோடி தொண்டர்களை பணத்தால் வாங்க முடியுமா? ஈபிஎஸ் சார்ந்துள்ள சமுதாய மக்கள் தலைவர், அம்மா காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு தான் வாக்களித்து வந்துள்ளனர்.
கஷ்டமாக உள்ளது
தலைவர் காலத்து ஆட்களை கைவிட்டுவிட்டனர் என்பதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. நமது கட்சியை பொறுத்தவரை தொண்டர்கள் கட்சி. தொண்டர்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்று கூறியுள்ளார் சசிகலா.
தாரை வார்ப்பதா?
இன்றைய தினம் ஒரு தொண்டரிடம் பேசிய சசிகலா, கட்சிக்காரர்கள் என்று ஒருவரை அமர வைத்து விட்டு சென்றேன். அவர்கள் மாறி விட்டால் என்ன செய்வது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தற்போது நாம் இழந்து நிற்கிறோம். எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்எல்ஏவாகி அதை எதிர்கட்சியினருக்கு தாரை வார்த்துள்ளனர் என்றும் சசிகலா குமுறியுள்ளார். இதே வேகத்தில் சசிகலா ஆடியோ ரிலீஸ் செய்தால் விரைவில் 100வது ஆடியோவை ரிலீஸ் செய்து விடுவார் சசிகலா.