மனித வெடிகுண்டுகள் என கொலை மிரட்டல்- சசி,தினகரனின் சதியை தடுக்க வேண்டும்- சிவி சண்முகம் பகீர் புகார்
சென்னை: தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; இந்த பழியை அதிமுக மீது போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்; ஆகையால் இந்த சதித் திட்டத்தைத் தடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.
அதிமுக உறுப்பினர் அட்டையை சசிகலா புதுப்பிக்கவில்லை; அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாத சசிகலா, கட்சி கொடியை பயன்படுத்த முடியாது என அண்மையில் அதிமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் டிஜிபியிடம் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் தினகரன் தரப்போ, முப்படை தளபதிகளிடமே புகார் கொடுத்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான்; அவர் கட்சி கொடியை பயன்படுத்த உரிமை உண்டு என்றது.

அனுமதி மறுப்பு
இதனைத் தொடர்ந்து சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அனுமதி கோரி அமமுக நிர்வாகி செந்தமிழன் போலீசில் மனு கொடுத்திருந்தார். ஆனால் சென்னை போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். மேலும் சென்னை மாநகரில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

மீண்டும் புகார்
இந்நிலையில் இன்று மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் சென்றனர். சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக டிஜிபியிடம் அமைச்சர்கள் மீண்டும் புகார் கொடுத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது:

மனித வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர்கள், நாங்கள் 100 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழ்நாட்டுக்கு வருவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் ஏற்கனவே கட்சி, கொடியை மதுசூதனன் தரப்புக்குதான் என தீர்ப்பளித்துவிட்டது. இதன் பின்னரும் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர்; அதிமுக கொடியை பயன்படுத்துவார். நீங்கள் முப்படை தளபதியிடமும் கூட புகார் கொடுங்கள் என தினகரன் பேசி உள்ளார்.

சசிகலா, தினகரன் சதி
டிடிவி தினகரனின் இந்த பேச்சு வன்முறையை தூண்ட திட்டமிட்டுள்ளதை காட்டுகிறது. சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் தமிழகத்தில் மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த பழியை அதிமுக மீது போடவும் திட்டமிட்டிருக்கின்றனர். இவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை.

சதியை தடுக்க மனு
அதிமுகவின் உறுப்பினராகவே இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது. சசிகலா, தினகரனின் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் சண்முகம் கூறினார்.












Click it and Unblock the Notifications