மறுபடியும் புரட்சி பயணம்? இதுக்கு ஒரு எண்டே இல்லையா? பரிதவிக்கும் தொண்டர்கள்! பிளானை மாற்றிய ஓபிஎஸ்!
திண்டுக்கல் : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலாவுடன் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வரும் நிலையில், மீண்டும் புரட்சிப் பயணம் என சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் எப்போது சந்திப்பு நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிர்வாகிகளும் கேட்டு வருவதால் தற்போதைக்கு இந்த திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் ஒத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் தனக்கான இடத்தை தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வம் அதிரடியான முடிவுகளை அறிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக அதிமுகவில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் மேலும் சில ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தகவல் தெரிவித்து வந்தனர்.
ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ள நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் பலர் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தாவ இருக்கும் தகவலால் அதிர்ந்து போயுள்ளது தேனி ரத்தத்தின் ரத்தம்.

சசிகலா சந்திப்பு
இதனையடுத்து விரைவில் சசிகலா, டிடிவி தினகரனுடன் சந்திப்பு, கோவை பொதுக்கூட்டம், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார் ஓபிஎஸ். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு இருப்பதால் அது தொடர்பான வேலைகளில் .பன்னீர்செல்வம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை என மிகவும் பிசியாக இருக்கும் ஓபிஎஸ், சசிகலாவை எப்போது சந்திப்பார் என்பது குறித்து அவரது ஆதரவாளர்களை கேள்வி கேட்டு வருகின்றனர்.

மீண்டும் சுற்றுப்பயணம்
விரைவில் அவர்கள் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் புரட்சி பயணத்தை சசிகலா மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனிடைய எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் இதுவரை வெளிப்படையாக சசிகலா பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் கூட அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் ஓ பன்னீர்செல்வம் குறித்தும் பொதுவெளிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் குறிப்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார்.

ஒற்றுமை
ஆனால் சசிகலாவோ 'ஒற்றுமை' என ட்விட்டரில் ஒற்றை வார்த்தையோடு நின்று கொண்டார். இதனால் சசிகலா ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு எப்போது நடக்கும் என்பது தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். இதனிடைய சந்திப்பு குறித்த பணிகளை துவக்காமல் மீண்டும் சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். கடந்த முறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறான நிகழ்வுகள் ஏதும் அரங்கேறவில்லை.

அதிருப்தி
இப்படி ஒவ்வொரு முறையும் ஓ.பன்னீர்செல்வம் சறுக்கலை சந்திக்கும்போதெல்லாம் சந்திப்பு நடக்கப் போகிறது என தகவல் வருவதும் அதன் பின்னர் சசிகலா சுற்றுப்பயணம் சென்றதும் அந்தத் திட்டம் கைவிடப்படுவதும் வழக்கமாகி வருகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான நிகழ்வுகளை நடைபெற்று வருவதால் விரக்தி அடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலா சந்திப்பு திட்டத்தை ஒத்திவைத்து விட்டு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக கூறுகின்றனர் தேனி ஆதரவாளர்கள். இதனால் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு மீண்டும் தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications