நூற்றுக்கணக்கான கார்கள் புடை சூழ.. அதிமுக கொடி கட்டிய காரில்.. சென்னைக்குப் புறப்பட்டார் சசிகலா!
பெங்களூர்: பெங்களூர் தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பச்சை நிற சேலையில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்னை புறப்பட்டார் சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அதற்கு முன்னதாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றார். கொரோனா தொற்று நீங்கிய நிலையில் அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் தேவனஹள்ளியில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு தன்னை நேற்று வரை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதிமுக கொடி
அவர் இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். பச்சை நிறத்திலான சேலை அணிந்து கொண்டுள்ளார். அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்ற பின்னர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து தேவனஹள்ளி பண்ணை வீட்டுக்கு சென்ற போது அவர் அதிமுக கொடி பொருத்திய ஜெயலலிதா காரில் சென்றார்.

அதிமுக உறுப்பினர்
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதிமுக உறுப்பினரே இல்லாத சசிகலா எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என அதிமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கும் பதிவு செய்திருந்தனர். இதனால் தமிழகம் வரும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

சென்னை
அதன்படி இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை புறப்பட்டுள்ளார் சசிகலா. அவர் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். வழிநெடுகிலும் தொண்டர்கள் பூசணிக்காய் உடைத்தும் தேங்காய் உடைத்தும் வரவேற்பு அளிக்கிறார்கள்.

சசிகலா
இதற்காக அதிகாலை முதலே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொண்டர்கள் குவிந்தனர். வழியெங்கும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை வழிநடத்த வருகை தரும் சசிகலா என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications