ஜெ. பிரசார வாகனத்தில் சசிகலா தென்மாவட்டங்களில் பயணம்- முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் சசிகலா. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை செலுத்தினார்.
Recommended Video
பெங்களூரு சிறை வாசத்துக்குப் பின்னர் சட்டசபை தேர்தலின் போது தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார் சசிகலா. சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சசிகலா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என கூறப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமது ஆதரவாளர்களை சந்திக்காமல் இருந்தார் சசிகலா. மேலும் ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்து பேசி அதனை பதிவு செய்து ஆடியோ அரசியல் நடத்தினார் சசிகலா.
பின்னர் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கும் சென்றார் சசிகலா. இதன் தொடர்ச்சியாக தற்போது தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார்.

ஜெ. பிரசார வாகனத்தில்..
தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்த சசிகலா தனியார் ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இன்று காலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மதுரை கோரிப்பாளையம் வந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினர்.

ஆதரவாளர்கள் வரவேற்பு
இன்று காலை முதலே லேசான சாரல் மழையுடன் பெய்த நிலையில், அதிமுக, அமமுக கொடியுடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர்.

பசும்பொன்னில்
இதனையடுத்து தெப்பக்குளம் சந்திப்பில் மாவீரர்கள் மருது சகோதரர்கள் சிலைக்கும் சசிகலா மாலை அணிவித்தார். பின்னர் ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு சில நிமிடங்கள் தரையில் அமர்ந்தார் சசிகலா. பசும்பொன்னில் நாளை தேவர் ஜெயந்தி விழா நடைபெறும் போது அதிமுக - அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் வகையில் இன்றே சசிகலா பங்கேற்றார். அவருக்கு நேற்று இரவு போலீசார் அனுமதி அளித்தனர்.

அதிமுகவில் குழப்பம்
அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ், செல்லூர் ராஜூ உள்ளிட்ட தென்மாவட்ட அதிமுக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கேபி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்ட வடக்கு, மேற்கு மாவட்ட அதிமுக தலைவர்கள் சசிகலாவை தீவிரமாக எதிர்க்கின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் தென்மாவட்ட பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications