செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்! திமுக எண்ணம் ஈடேறாது.. சசிகலா
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில் செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என வி.கே.சசிகலா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து வி.கே. சசிகலா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்".
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் அவர்கள் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் திரு. செங்கோட்டையன் அவர்கள் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை திரு.செங்கோட்டையன் அவர்கள் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என திரு.செங்கோட்டையன் அவர்களின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் திரு. செங்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!
நாளை நமதே! வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி
வணக்கம்
என்றும் அம்மாவின் வழியில்
வி.கே.சசிகலா
கழகப் பொதுச்செயலாளர்
அஇஅதிமுக
இவ்வாறு அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications