தம்பி மகனுக்கு திருமணம்... சிறையில் இருந்து வாழ்த்துக்கடிதம் அனுப்பிய சசிகலா
சென்னை: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தனது தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவருக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருக்கிறார்.
சசிகலாவுக்கும் அவரது தம்பி திவாகரனுக்கும் இப்போது மனஸ்தாபங்கள் இருந்துவருவதால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் ஜெய் ஆனந்த் மீதுள்ள பாசம் காரணமாக அவருக்கு சிறையில் இருந்து வாழ்த்துமடல் அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா. தினகரனை முன்னிலை படுத்தி சசிகலா செய்யும் அரசியல் திவாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் தினகரன் பேச்சை நம்ப வேண்டாம் என தனது அக்கா சசிகலாவிடம் பலமுறை திவாகரன் கூறி பார்த்தார்.
ஆனால் திவாகரனின் பேச்சு சசிகலாவிடம் எடுபடவில்லை. இதனால் அக்கா தம்பிக்கு இடையே பகை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாத நிலை இருந்துவருகிறது. இதனிடையே தனது திருமணத்துக்கு வருமாறு ஜெய் ஆனந்த் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அத்தை சசிகலாவை சந்தித்து அழைத்திருக்கிறார். ஆனால் சசிகலா இசைவு தெரிவிக்கவில்லை, பார்க்கலாம் என்பதோடு உன் மீதுள்ள அன்பு எப்போதும் குறையாது என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி மன்னார்குடியில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கும் டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரனின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்கு தனது சுற்றத்தாரையும், உறவினர்களையும் மட்டும் அழைத்திருந்த திவாகரன், நேற்று மாலை சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அசைவ உணவு வகைகளில் அனைத்து ரகங்களும் இடம்பெற்றிருந்தன.
மேலும், அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் உள்ளிட்டோரும் திவாகரன் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதனிடையே அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஒரு சிலர் திவாகரனை அலைபேசியில் அழைத்து வாழ்த்துதெரிவித்திருக்கிறார்கள்.