டிச.4 மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதா பன், காபி கேட்டார்.. அதன்பின்னர்தான் மாரடைப்பு- சசிகலா வாக்குமூலம்!
சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் சொல்லும் டிசம்பர் 4-ந் தேதி மாலை அப்பல்லோ மருத்துவமனையில் பன், காபி கேட்டார்; சீரியல் பார்த்து கொண்டிருந்தார் என சசிகலா தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் என்ன கூறியிருந்தார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன:

டிசம்பர் மாலை 4.20 மணிக்கு என்ன நடந்தது?
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம்: டிசம்பர் 4-ந் தேதி மாலை சுமார் 4.20 மணியளவில் ஜெயலலிதா கேட்ட பன், காபியை மருத்துவமனை செவிலியர் டிராலியில் வைத்து கொண்டு வந்தார். ஜெயலலிதா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு டிவியில் ஜெய வீர ஹனுமான் சீரியல் பார்த்துக் கொண்டே அருகில் வை சீரியல் முடிஞ்சதும் எடுத்துக்கறேன் என்றார்.
சூடு ஆறிவிடும் என்றேன்.. கை அசைத்து சற்று பொறு சசி என்றார். சிறிது நேரத்திலேயே சீரியல் முடிந்த உடன் கையில் இருந்த ரிமோட்டை ஜெயலலிதா ஆப் செய்தார். நான் டிராலியை அருகில் வைக்க முயன்றேன். அப்போது ஜெயலலிதாவுக்கு அருகில் ஒரு பெண் மருத்துவரும் செவிலியர் ஒருவர் நின்று கொன்டிருந்தனர். அறைக்கு வெளியே டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் அமர்ந்து இருந்தார்.

திடீர் நடுக்கம்,, நாக்கை துறுத்தி..
திடீரென ஜெயலலிதாவின் உடலில் ஒரு பெரிய நடுக்கம் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் நாக்கு ஒரு பக்கமாக துறுத்த, பல்லைக் கடித்துக் கொண்டே ஏதோ சத்தமிட்டார். நான் அப்போது அக்கா, அக்கா என கத்த தொடங்கினேன்.. ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டு தனது இரு கைகளையும் உயர தூக்கி என்னை நோக்கி கொண்டு வந்தார். நான் கதறி கொண்டே, ஜெயலலிதாவை தாவி பிடித்தேன். ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தார். அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் துரித கதியில் சிகிச்சை கொடுத்தனர்.

அக்கா அக்கா என கதறி கூப்பிட்டேன்
உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த டாக்டர் ஒருவர், என்னை ஜெயலலிதாவின் காதுக்கு அருகில் சத்தமாக கூப்பிட சொன்னார். நான் அக்கா, அக்கா என பலமாக கத்த தொடங்கினேன். இருமுறை என்னை ஜெயலலிதா பார்த்தார். பிறகு கண்களை மூடிவிட்டார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது; உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வெளியே போக சொல்லிவிட்டனர். தாங்க முடியாத கவலையில் கத்தி கூச்சலிட்டு நான் மயங்கிவிட்டேன். நான் மயக்கம் தெளிந்தபோது, ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிக்ச்சைகள் நடந்து வந்தன. ஏராளமான மருத்துவர்கள் அங்கு வந்து சிகிச்சை அளித்தனர். பின்னர் 2-ம் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறைக்கு ஜெயலலிதாவை அழைத்து கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

ஜெ. இறப்பால் அதிர்ச்சி, மயக்கம்
எய்ம்ஸ் மருத்துவ குழு, டாக்டர் ரிச்சர்ட் பீலே குழுவை தொடர்பு கொண்டு சிகிச்சை நடக்கிறது.. எக்மோ கருவியை இணைத்துள்ளோம். இதனால் செயலிழந்த இதயம், செயல்படக் கூடும் என என்னிடம் கூறினர். ஜெயலலிதா எப்படியும் பிழைத்துவிடுவார்; அதிசயம் நடக்கும் நம்பிக்கையோடு சிகிச்சை அளியுங்கள் என நான் சொன்னேன். ஆனால் டிசம்பர் 5-ந் தேதி வரை எந்த ஒரு முன்னேற்றமும் நடக்கவில்லை. இனி மேலும் முன்னேற்றம் ஏற்படாது எனும் அதிர்ச்சி செய்தியை தயங்கி தயங்கி தெரிவித்தனர். அக்கா இறந்த தகவலை கேட்ட உடனேயே நான் அலறி கதறி மீண்டும் மயக்கமானேன். இவ்வாறு சசிகலா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications