தினகரன் வீட்டு திருமண வரவேற்பு, தேவர் குருபூஜை..டூருக்கு ரெடியாகும் சசிகலா- கடுகடு எடப்பாடி அண்ட் கோ
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வீட்டு திருமண வரவேற்பு, தேவர் குருபூஜை என அடுத்த சுற்று பயணத்துக்கு தயாராகிவிட்டார் சசிகலா. இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்களை மட்டும் வெளியிட்டு அரசியல் செய்தார் சசிகலா.
அதன்பின்னர் சற்று அமைதியாக இருந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அமர்க்களப்படுத்தினார் சசிகலா. அடுத்த நாள் அக்டோபர் 17-ந் தேதி சென்னை தியாகராயர் நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றினார். அப்போது திறக்கப்பட்ட கல்வெட்டில் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.

போலீசில் புகார்
சசிகலாவின் இந்த அமர்க்களங்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பை ரொம்பவே பதற்றம் அடைய வைத்திருக்கிறது. சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா மீதான அதிருப்தியை ஏகத்துக்கும் கொட்டித் தீர்த்தார். ஒருகட்டத்தில் சூரியனைப் பார்த்து என்கிற வசனங்களையெல்லாம் கூட உதிர்த்தார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் அதிமுக கொடியை பயன்படுத்தியது, கல்வெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என போட்டது ஆகியவற்றுக்கு எதிராக சசிகலா மீது போலீசில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார் புகாரும் கொடுத்திருக்கிறார்.

சசிகலாவின் சட்டவிரோத நடவடிக்கை
ஜெயக்குமார் போலீசில் அளித்த புகாரில், கடந்த அக்டோபர் 17-ந் தேதி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியையும் ஏற்றினார். அங்கு நினைவு கல்வெட்டை திறந்துவைத்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.இது முற்றிலும் சட்டவிரோதமானது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சசிகலா தரப்பு இதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளவில்லையாம்.

தேவர் குருபூஜையில் சசிகலா
இந்நிலையில் அடுத்த சுற்றுப் பயணத்துக்கு சசிகலா தயாராகிவிட்டார். தஞ்சாவூரில் வரும் 27-ந் தேதி டி.டி.வி.தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அமமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தடபுடலான விருந்துக்கு தினகரன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் சசிகலா. அங்கிருந்து அவர் தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 29-ந் தேதி பசும்பொன்னில் நடைபெறும் 59-வது தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலா திட்டமிட்டிருக்கிறார். இதற்கான அனுமதி கோரி போலீசில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா பயணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்?
சசிகலாவைப் பொறுத்தவரையில் டெல்டா மாவட்டங்களைவிட தென்மாவட்டங்களில்தான் தமக்கு செல்வாக்கு இருப்பதாக நம்புகிறார். தென்மாவட்டங்களுக்கு செல்லும் சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரான மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வரவேற்பளிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சசிகலா பக்கம் போகாத அதிமுக முக்கிய தலைகள் சசிகலாவின் தென்மாவட்ட சுற்றுப் பயணங்களின் போது வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது என நம்புகிறது அவரது தரப்பு. இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ரொம்பவே அதிர்ந்து போயிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications