ஜெயலலிதா மறைவுக்கு பின் 7 ஆண்டுகளில் முதல் முறையாக திடீரென கொடநாடு எஸ்டேட் செல்லும் சசிகலா!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக அதாவது 7 ஆண்டுகள் கழித்து நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்கிறார் சசிகலா. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 3 நாட்கள் சசிகலா தங்க உள்ளார். கொடநாடு எஸ்டேட் முன்பாக ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜையில் நாளை சசிகலா பங்கேற்கிறார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு தேயிலை தோட்டமும் அந்த பங்களாவும் சரித்திரங்களையும் மர்மங்களையும் கொண்டதாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து அரசு நிர்வாகத்தை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது உண்டு. 2016 சட்டசபை தேர்தலின் போது கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கி இருந்தனர். அதன் பின்னர் 2016 டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் காலமானார்.

2017-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் சசிகலா சிறையில் இருந்த போதும் அதிமுகவில் ஏராளமான பிரளயங்கள் வெடித்தன.
2017-ம் ஆண்டு சசிகலா சிறையில் இருந்த போது கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இன்னமும் கொடநாடு எஸ்டேட் கொலை- கொள்ளை மர்மங்கள் விலகாலம் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரும் இன்றைய அண்ணா திமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை நோக்கியும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் சசிகலாவும் விசாரணை வளையத்தில் இருந்து வருகிறார்.
2020-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானது முதலே அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என பலநூறு முறை சசிகலா அறிவித்து கொண்டே இருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலும் முடிந்து 2024 லோக்சபா தேர்தலும் நெருங்கிவிட்ட நிலையிலும் ஆக்டிவ் அரசியலில் சசிகலா இறங்கவே இல்லை.
இந்த பின்னணியில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதாவது 7 ஆண்டுகள் கழித்து திடீரென சசிகலா கொடநாடு எஸ்டேட் செல்கிறார். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இன்று முதல் 3 நாட்கள் சசிகலா தங்க உள்ளார். கொடநாடு எஸ்டேட் பங்களா முன்பாக ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நாளை காலை நடைபெறுகிறது. இதில் சசிகலா பங்கேற்க உள்ளார். சசிகலாவின் கொடநாடு எஸ்டேட்டுக்கான திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications