சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர்.. தமிழக காங்கிரஸ்-ன் அடுத்த தலைவர் யார்?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தரப்பினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அதில் சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ராகுல் காந்தியின் ஆதரவை பெற தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பின்னரே முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட் மற்றும் 1 ராஜ்ய சபா என்று தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. இருப்பினும் திமுக உடனான தொகுதி பங்கீட்டால் ராகுல் காந்தி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சோகம் அடைந்த செல்வப்பெருந்தகை உடனடியாக பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறி இருக்கிறார். அதனைதான் காங்கிரஸ் தலைமையும் விரும்பி இருக்கிறது. பின்னர் சட்டசபைத் தேர்தலுக்கு பின் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை செல்வப்பெருந்தகையும் பதவி விலக உள்ளதாக அறிவித்துவிட்டார்.
செல்வபெருந்தகைக்கு 2027ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் இருக்கும் போதும் கூட, முன்கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதற்கு ராகுல் காந்தியே காரணமாக அமைந்துள்ளார். ஒவ்வொரு மாநிலத் தலைமையும் தனக்கு கட்டுப்படுபவராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப பல்வேறு நியமனங்கள் காங்கிரஸ் கட்சியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவியை அடைய வேண்டும் என்று பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சிலர் காங்கிரஸ் தலைவர் கார்கே மூலமாக காய் நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், விஸ்வநாதன் ஆகியோர் கார்கே மூலமாக பேசி வருகின்றனர். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி உடனான நெருக்கத்தை பயன்படுத்தி பதவியை அடைய முயற்சிகள் நடக்கிறது.
ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில் ஆகியோர் ராகுல் காந்தி மூலமாக பதவியை பிடிக்க முயற்சிக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் தலித் நியமனம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டால், ராகுல் காந்தியின் முதல் சாய்ஸாக சசிகாந்த் செந்தில் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை பெண் தலைவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டால், ஜோதிமணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் இம்முறை திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்காது என்றே தெரிகிறது. இதனால் யாருக்கு ஜாக்பாட் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications