லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலா.. சாஹு விளக்கம்
சென்னை: மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே விக்கிரவாண்டி தொகுதிக்கு லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார்.
கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து விக்கிரவாண்டி திரும்பினார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே 5ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத்தேர்தல் எப்போது?
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி காலை முதலே அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் புகழேந்தி சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். காலை முதல் மாலை வரை பொன்முடி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு கண்ணீர் விட்டபடியே இருந்தார். அது போல் பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் அழுதபடியே புகழேந்தியின் உறவினர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை காலியானதாக தமிழக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கும் சென்றுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலுடனேயே விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. எனினும் அது எப்போது என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications