'சம்பவமே வேற'.. கள்ளக்குறிச்சியில் தாக்கிய 'முகில் வீரப்பன்' குறித்து சாட்டை துரைமுருகன் விளக்கம்!
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய சென்னை தம்மை தாக்கியது 'முகில் வீரப்பன்' என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளியாக இருந்த தமிழ்த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த முகில் வீரப்பன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருடனும் மிக நெருக்கமாக இருந்தவர் என்கின்றன தகவல்கள்.
கள்ளக்குறிச்சியில் 55 பேர் உயிரைக் குடித்திருக்கிறது கள்ளச்சாராயம். இன்னும் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மரணங்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் ரூ10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையிலும் நேற்று கள்ளக்குறிச்சி உயிர் பலிகள் குறித்து பேசப்பட்டது. சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்தவும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் 'சாட்டை' துரைமுருகன் நேரில் சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சாட்டை துரைமுருகனுடன் ஒருதரப்பு வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அப்போது திடீரென ஒரு நபர் சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றார். இதற்கு சாட்டை துரைமுருகனும் பதிலடி தர முயற்சித்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாட்டை துரைமுருகன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து உண்மை கள நிலவரத்தை அறிந்து திரும்பும் போது முகில் வீரப்பன் என்கிற நபர் குடிபோதையில் அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார் அதைக் நாம்தமிழர் கட்சியினர் தட்டிக் கேட்ட போது ஒருமையில் பேசி கற்களை கொண்டு வாகனத்தில் வீசி தாக்க முற்ப்பட்டார்,அப்போது பொது மக்கள் அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர் என முகில் வீரப்பன் படத்தை பகிர்ந்துள்ளார்.

யார் இந்த முகில் வீரப்பன் என நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இருந்த தமிழ்த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முகிலன் என்ற முகில் வீரப்பனும் ஒருவர். நாம் தமிழர் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான புதுக்கோட்டை முத்துக்குமாருடன் நெருக்கமாக இருந்தவர். முத்துக்குமார் படுகொலைக்குப் பின்னர் சீமான் வீட்டிலேயே இருந்து உதவிகள் செய்து வந்தார். பின்னர் சீமானிடம் இருந்து விலகி யூ டியூப் ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியை விமர்சித்து வருகிறார் என்றனர்.












Click it and Unblock the Notifications