மீண்டும் கிளம்பிய “மின்வெட்டு” பிரச்சனை.. புழுக்கத்தில் அவதிப்படும் மக்கள்! எஸ்டிபிஐ வைத்த கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் மின் வெட்டு பரவலாக ஏற்பட்டு வரும் நிலையில் துவக்கத்திலேயே சரிசெய்து மின் வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோடை வெயில் தமிழ்நாட்டில் கடுமையாக தாக்கி வரும் நிலையில், மின் வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மின் வெட்டுகள் ஏற்பட்டு வருகின்றன. கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவு 1 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட தொடங்கியுள்ளது. கோடை காலத்தில் மின் வெட்டால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர். மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பரவலாக ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மின்விசிறி உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் தவிக்கின்றனர்.
கோடை காலங்களில் மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் சூழலில், நேற்று முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மின்பற்றாக்குறை காரணமாக இன்னும் அதிகமான மின்வெட்டு இருக்க வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக நிகழும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறியை கூட இயக்க முடியாத அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்கால அடிப்படையில் துவக்கத்திலேயே இதனை சரிசெய்து மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications