தலைதூக்கும் 'மாவோயிஸ்டுகள்’-கேரளாவில் மீண்டும் துப்பாக்கி சண்டை- தமிழகம் முதுமலையில் தேடுதல் வேட்டை!
சென்னை: கேரளா மாநிலம் கண்ணூரில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை நடத்திய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டின் முதுமலை வனப்பகுதியில் பதுங்கி உள்ளனரா? என தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக கடந்த நவம்பர் 7-ந் தேதி நடைபெற்றது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க கோரியும் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீதும் தேர்தல் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் குழு ஒன்று பதுங்கி இருந்தது. இந்த குழுவை கடந்த வாரம் கேரளாவின் அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் இறுதியில் 2 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் பிடிபட்ட மாவோயிஸ்டுகளிடம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநில போலீசாரும் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு, கர்நாடகாவில் மாவோயிஸ்டுகள் செயல் திட்டம் என்ன? யாருடன் தொடர்பு எனவும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு புதிய தகவல்கள் கிடைத்தன. இதனடிப்படையில் உருப்பம்குற்றி வனப்பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் எந்த மாவோயிஸ்டும் சிக்கவில்லை. போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய மாவோயிஸ்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனிடையே கேரளாவில் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டின் முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளனரா? அல்லது மாவோயிஸ்டுகள் முதுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனரா? என்பதை கண்டறிய அப்பகுதியில் தமிழ்நாடு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். தென்னிந்தியாவில் சில காலம் அமைதியாக இருந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் தலை தூக்கி இருப்பது பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications