நாட்டில் கொரோனா 3ஆம் அலை நிச்சயம் ஏற்படும்..யாரும் வைரசிலிருந்து பாதுகாப்பாக இல்லை.. விகே பால் பகீர்
சென்னை: கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் 3ஆம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்த நிதி ஆயோர் உறுப்பினர் விகே பால் ஒட்டுமொத்த தேசமும் பாதுகாப்பாக இருக்கும் வரை இந்த கொரோனாவில் இருந்து நாம் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தினசரி பாதிப்புகள் நான்கு லட்சம் வரை கூட சென்றது.
இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

கொரோனா 2ஆம் அலை
நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தாலும்கூட இன்னும் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பூசிகள் 98% வரை தடுப்பதாகவும் அவர் கூறினார்.

யாரும் பாதுகாப்பாக இல்லை
இது குறித்து அவர் கூறுகையில், "கொரோனா 2ஆம் அலை நாட்டில் இன்னும் முடியவில்லை. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்குக் குழுக்களை அனுப்பியுள்ளோம். ஒட்டுமொத்த தேசமும் பாதுகாப்பாக இருக்கும் வரை இந்த கொரோனாவில் இருந்து நாம் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா 3ஆம் அலை
கொரோனா 3ஆம் அலை குறித்து பல்வேறு தகவல்கள் வருகின்றன. கொரோனா 3ஆம் அலை எப்போது ஏற்படும், எப்படி ஏற்படும் உள்ளிட்டவை நம் கையில் இல்லை. அப்படி ஏதேனும் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கக் கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு, சிறார்களுக்குத் தேவையான வசதிகள், ஐசியு படுக்கைகள், மருந்துகள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தடுப்பூசி பணிகள்
கொரோனா வழிகாட்டுதல்களை நாம் முறையாகப் பின்பற்றினால் அடுத்த அலை தாக்காது. தடுப்பூசிகளும் கொரோனாவை தடுப்பதில் முக்கியமானது. வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 216 கோடி டோஸ்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 56 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications