"விட்றாதீங்க".. பறந்த ஆர்டர்.. திமிறி எழும் பாஜக.. போனை போடும் "ராதா".. கெத்து காட்டும் "கருப்பு"..!
கன்னியாகுமரி, தஞ்சாவூரில் பாஜகவின் களப்பணிகள் வேகம் எடுத்து வருகிறதாம்
சென்னை: அதிமுக, திமுக கட்சிகளின் பரபரப்புகளுக்கு நடுவே பாஜகவும் தன்னுடைய அதிரடியை சத்தமில்லாமல் துவங்கி உள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்றுதான், அனைத்து தமிழக கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தும் வருகிறது.
எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழக பாஜகவும் தன்னுடைய வியூகத்தை 6 மாதங்களுக்கு முன்பேயே வகுக்க ஆரம்பித்துவிட்டது.
அதனால்தான், அதற்கான முதல் ஆலோசனை கூட்டத்தை மதுரையில் அன்றே துவங்கினார் மாநில தலைவர் அண்ணாமலை.. அப்போது அவர் பேசியபோது, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்றுகூறினார்.

15 தாமரைகள்
ஆலோசனை கூட்டத்திலேயே 15 இடங்கள் கன்பார்ம்டு என்று அண்ணாமலை கூறியிருந்தது, மற்ற கட்சிகளுக்கு வியப்பை தந்தது. "தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும்" என்று அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததற்கு முன்பேயே ஜரூர் வேலையில் இறங்கியது தமிழக பாஜக.. அத்துடன், பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, அந்த 2 முக்கிய அட்வைஸ்கள்தான், கமலாலயத்துக்கு பூஸ்ட் தந்ததுபோல ஆகிவிட்டது.. ஆளுநர் மாளிகையில் நடந்த தமிழக ஆலோசனை கூட்டத்தில், தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி சொன்னதாவது:

பூத் கமிட்டிகள்
"சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்துங்கள்.. திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. அதற்கு பதிலாக, மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.. அத்துடன் தமிழகம் முழுக்க அனைத்து ஓட்டு சாவடிகளிலும் பாஜக பூத் கமிட்டிகளை அமையுங்கள்" என்று பிரதமர் அறிவுறுத்தினாராம்.

கன்பார்ம்டு
இப்போது விஷயம் என்னவென்றால், மாநிலம் முழுவம் அந்தந்த மாவட்டங்களில் பாஜக சீனியர்கள் தங்கள் களப்பணியில் வேகம் எடுத்துள்ளனர்.. அதில் 2 பேருக்கு இப்பவே சீட் கன்பார்ம் என்பதுபோல, பேச்சுக்களும் கிளம்பி உள்ளன.. அதில் ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றொருவர் கருப்பு முருகானந்தம் என்கிறார்கள். தஞ்சாவூரில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்திடம் ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டிருந்ததாம்.. அதன்படியே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை பாஜகவில் இணைக்கும் பொறுப்பை பாஜக மாநில துணை தலைவரான கருப்பு முருகானந்தம் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், அதை வெற்றிகரமாகவும் செய்து முடித்தார்..

குறி + குஷி
ரஜினி ரசிகர்கள் பெரும்பாலானோர், அண்ணாமலை முன்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர்.. இப்போது ரஜினியை மீண்டும் கட்சிக்குள் இழுக்கும் வேலையில் பாஜக மும்முரமாகி உள்ளதால், பாஜகவில் இணைந்த ரசிகர்களுக்கும் குஷியை தந்து வருகிறதாம். வரப்போகும் எம்பி தேர்தலில் தஞ்சையை குறி வைத்து, முருகானந்தம் காய் நகர்த்தி வருகிறார்.. எப்படியும் இந்த முறை சீட்டை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளதாக தெரிகிறது..

கருப்பு முருகானந்தம்
அதேபோல, தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி, தஞ்சை பாஜகதான் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்ததும் தஞ்சை மாவட்டம்தான். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், "இந்த வழக்கை சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. சாதாரண மனிதனின் போராட்டத்திற்கு மதிப்பளித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். நீதிக்காக போராடிய பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.. இப்படி பல்வேறு அதிரடிகளை நடத்தி வரும் நிலையில், கருப்பு-க்கு இந்த முறை சீட் உறுதி போல? என்று முணுமுணுக்கிறார்கள் தஞ்சை பாஜகவினர்.

பொன்.ராதா
இதே போன்ற பேச்சைதான், கன்னியாகுமரியிலும் கேட்க முடிகிறது.. அதற்கு காரணம், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவார்.. இவர் இப்போது பம்பரமாக தொகுதியை சுற்றி சுற்றி வருகிறாராம்.. நிர்வாகிகளுக்கு போனை போட்டு, தொகுதி வளர்ச்சி குறித்து பேசி வருகிறாராம்.. முன்பெல்லாம், எந்த போனும் அவ்வளவாக வராத நிலையில், சமீப காலமாகவே, பொன்.ராதாவிடமிருந்து அடிக்கடி போன்கள் பறந்து வருகிறதாம்.. ஒருபக்கம் நிர்வாகிகள் என்றால் மறுபக்கம், பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறாராம்..
தினமும் ஏதாவது ஒரு கிராம கோயிலுக்கு சென்று மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

சீனியர்கள்
இந்த தீவிரத்தை பார்த்து, பொன்.ராதாவுக்கும் சீட் கிடைச்சிடும் போலயே என்று வியந்து சொல்கிறார்களாம் குமரி பாஜகவினர்.. ஆனாலும், இப்படி சீனியர்களுக்கே பொறுப்புகளை தந்து கொண்டிருந்தால், அடுத்துள்ளவர்கள் மேலே வர வேண்டாமா? அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் ஆதங்கக்குரல்கள் வெடித்து வருகின்றன.. தஞ்சை, குமரி இரு இடங்களிலுமே ஓரளவு பாஜக ஆதரவு அலை இருந்தாலும், இந்த முறை திராவிட கட்சிகள், அங்கு என்ன செய்ய போகின்றன? எப்படி ஓட்டுக்களை அள்ள போகின்றன என்பதையும் உற்றுநோக்க வேண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications