எடப்பாடி தடாலடி ‘ரகசிய’ காரணம்.. பின்னணியில் கொங்கு மாஜி! “கபளீகரம்” வந்தா காலி.. கூட்டணிக்கு நோ!
சென்னை : டிடிவி தினகரன், சில வாரங்களாகவே அதிமுக கூட்டணியில் இணையத் தயார் என பேசி வந்த நிலையிலும் அதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, திடீரென அதற்கு 1% கூட வாய்ப்பு இல்லை எனக் கூறியிருப்பதன் பின்னணியில், அவருக்கு நெருங்கிய சகாக்களின் கை இருக்கிறதாம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக ஆதரவு போக்கில் செயல்படத் தொடங்கியது முதலே, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை சாஃப்ட்டாகவே அணுகி வருகிறார். சமீப சில வாரங்களாக, திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்றும் கூறி வந்தார் தினகரன்.
இந்நிலையில் தான் பாஜகவை சீண்டத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார். எடப்பாடி இந்த முடிவுக்கு வந்தது, அவருக்கு நெருக்கமான புள்ளிகளுடனான ஆலோசனைக்குப் பிறகுதானாம்.

திடீர் பாய்ச்சல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்திக்காதது ஏன் என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஈபிஎஸ் பொங்கி எழுந்துவிட்டார். உள்துறை அமைச்சர் தனிப்பட்ட நிகழ்வில் பங்கேற்க வரும்போதெல்லாம் நாங்கள் போய் சந்திக்க வேண்டுமா? அவர்கள் தேசியக் கட்சி, நாங்கள் இங்கு பிரதான எதிர்க்கட்சி என்றும் பொங்கினார் ஈபிஎஸ். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டெல்லிக்கு தேடிச் சென்று பார்த்த ஈபிஎஸ்ஸின் இந்த பாய்ச்சல் அனைவரையும் வியக்க வைத்தது.

பணிந்து செல்லக்கூடாது
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் பல்ஸ் பிடித்தே, எடப்பாடி பழனிசாமி இப்படியான அட்டாக்கில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, முழுமையாக பாஜகவிடம் சரண்டர் ஆனது போன்ற தோற்றம் நிலவுகிறது, இதை தலைமை மாற்றிக்கொள்ள வேண்டும் என கட்சிக்குள் கலகக் குரல் எழுந்தது. அதிமுக தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைக்க, பாஜகவுக்கு பணிந்து செல்லக்கூடாது என்ற ஸ்டாண்டை எடுத்ததாலேயே, அமித்ஷாவையும் சந்திக்கவில்லை. அது குறித்த கேள்விக்கும் ஈபிஎஸ் காட்டமாக பதிலளித்திருக்கிறார் என்கிறார்கள்.

ஒரே முடிவு
அதேபோல, தினகரனையும் கூட்டணியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி. ஆனால் அந்த மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 1% கூட இடம் கிடையாது என்று கூறியுள்ளார் ஈபிஎஸ். முன்னதாக அதிமுக தலைமையான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே பல முறை அறிவித்திருந்த நிலையில், இப்படி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தாக்குதல் கணைகள்
சமீப காலமாகவே ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து தாக்கிப் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் பற்றி எதுவும் பேசவில்லை. பாஜகவின் விருப்பம் தினகரனோடும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பது தெரியவந்ததாலேயே, எடப்பாடி பழனிசாமி தினகரன் பற்றி பெரிதாக எங்கும் பேசவில்லை எனக் கூறப்பட்டது. அதேசமயம், ஓபிஎஸ்ஸை ஒருக்காலும் சேர்த்துக் கொள்ள முடியாது என்ற தனது முடிவைத் தெரிவித்து, ஓபிஎஸ் மீது தாக்குதல் கணைகளை தொடுத்து வந்தார் எடப்பாடி.

பாஜகவை நோக்கி நகர்ந்த டிடிவி
அதேசமயம், டிடிவி தினகரன், அதிமுகவோடு நெருங்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். தீயசக்தி திமுகவை வீழ்த்த அதிமுகவோடு கூட்டணி வைப்போம் என்றார். திமுக பாஜகவை சொல்லி பயமுறுத்துகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த இத்தனை ஆண்டு காலத்தில் அப்படி என்ன செய்து விட்டார்கள், சிறுபான்மையினர் ஓட்டுக்காக திமுக பொய் சொல்லி பயமுறுத்துகிறது என்றெல்லாம், பாஜகவை நோக்கி நகர்ந்து வந்தார் தினகரன். பல விவகாரங்களில் ப்ரோ பாஜக நிலைப்பாட்டையே எடுத்து வந்தார்.

பின்னணி என்ன?
இந்நிலையில் தான் திடீரென தினகரனுடன் கூட்டணி அமைக்க 1% கூட வாய்ப்பு இல்லை என தினகரனுக்கும், பாஜகவின் முயற்சிகளுக்கும் கட்டையைப் போட்டிருக்கிறார் எடப்பாடி. திடீரென ஏன் தினகரனையும் தட்டி விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரிக்கையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தங்கமான மாஜி உள்ளிட்ட தனக்கு நெருக்கமான சிலரின் கருத்துகளைத் தொடர்ந்தே, தினகரனை கூட்டணி கட்சியாக கூட சேர்க்கக்கூடாது என தீர்மானமாக முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் ஆலோசனை
டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைய விரும்புவது, பாஜகவின் தேர்தல் கூட்டணி கணக்குகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் திட்டம், சிறிய கட்சிகளின் தலைவர்கள் தன்னிடம் பேசி வருவது குறித்தெல்லாம் சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அதிமுகவின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கொங்கு நிர்வாகிகள் பலதரப்பட்ட கருத்துகளைக் கூறியுள்ளனர்.

நெருக்கமான மாஜி
எடப்பாடிக்கு நெருக்கமான அந்த கொங்கு மண்டல மாஜி ஒருவர், "என்னை கேட்டால், ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்ப்பதில் கூட பிரச்சனையில்லை. நம்மை மீறி அவர் கட்சியில் பெரிய ஆதிக்கம் செலுத்தமுடியாது. ஆனால், டிடிவி தினகரனை நாம் கூட்டணியில் சேர்த்தாலே நமக்கு சிக்கல் தான். அதிமுக நிர்வாகிகளை அவர் நெருங்கினாலே, கட்சியை கபளீகரம் செய்துவிடுவார், நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள், ரிஸ்க் எடுக்காதீர்கள்" என ஈபிஎஸ்ஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காரணம்
டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது, தனக்கு நெருக்கமான புள்ளிகளின் கருத்தைத் தொடர்ந்து தானாம். ஓபிஎஸ்ஸை விட தினகரன் நமக்கு கூடுதல் ஆபத்து என தனக்கு நெருக்கமானவர்கள் கூறியதாலேயே அமமுகவுடன் கூட்டணி கிடையாது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தடாலடியாக போட்டு உடைத்தாராம் ஈபிஎஸ். இதன் மூலம், தனது இடத்திற்கு பங்கம் வராமல் தொண்டர்கள் மத்தியிலும் நம்பிக்கைக்குரிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications