கோட்சே விவகாரம்: கமலை எதிர்க்கும் வலது சாரிகள்.. மவுனம் காக்கும் "முற்போக்குகள்"!
சென்னை: காந்தியடிகளை கொலை செய்த கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என துணிச்சலாக பேசியிருக்கிறார் கமல்ஹாசன். அவரது பேச்சை வலதுசாரிகள் வன்மையாக கண்டிப்பதில் ஆச்சரியம் இல்லை..ஆனால் தங்களை முற்போக்குவாதிகள் என அழைத்துக்கொள்வோர் மிகவும் மவுனம் காப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
லோக்சபா தேர்தலில் நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய பிரச்சனைகளைப் பற்றி பேச பாஜக தயாராக இல்லை. இது தொடர்பான கேள்விகளுக்குப் பாஜகவிடம் பதில்களும் இல்லை.
ஏதோ நினைத்து.. பேசக் கூடாததை பேசி இப்படி சிக்கிக்கொண்டாரே மோடி!
பாஜகவின் பழங்கால பேச்சு
இதனால் 1980களின் பிரச்சனைகளை வைத்து மக்களை பிளவுபடுத்தி உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறது பாஜக. இந்நிலையில்தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 1940களின் பிரச்சனைகளை பாஜகவுக்கு எதிராக கையிலெடுத்தார்.
கோட்சே குறித்து கமல்
அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய கமல்ஹாசன், 1948-ல் காந்தியடிகளை படுகொலை செய்த கோட்சே ஒரு இந்து தீவிரவாதி; சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அணுகுண்டை வீசினார். கமல்ஹாசனின் இந்த பெருங்குண்டை வலதுசாரிகளும் இந்துத்துவா அமைப்பினரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் இடைவிடாது ட்விட்டரில் கதறுவதை படிக்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.
பாஜக கொந்தளிப்பு
சீக்கியர் படுகொலை விவகாரத்தை இப்போது தூண்டிவிடும் பிரதமர் உண்மையை பேசுகிறார் என்றும் காந்தியார் படுகொலை கமல் பேசினால் பிரிவினைவாதம்; இனவாதம் என்றும் தாண்டிக் குதிக்கின்றனர் பாஜகவினர். பாஜகவினருக்கு கோபம் கொப்பளிக்கத்தான் செய்யும். அது மிகச்சரியானது; அவர்களது தத்துவார்த்தப் பார்வை அதுவே.
முற்போக்குகள் மவுனம்
அதேநேரத்தில் கமல்ஹாசனின் துணிச்சல் மிக்க இந்த பேச்சுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய பெரும்பாலான முற்போக்காளர்கள் மவுனிகளாக இருக்கின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மட்டும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். தேர்தல் அரசியல் கணக்குகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் மவுனம் காக்கலாம் அதுவும் சரி.. முற்போக்கு இயக்கங்களுக்கு என்னவாயிற்று? ஏன் இந்த கனத்த மவுனம் என்பதுதான் 'வெளங்காத விடயம்'.