ரூ.6000 வெள்ள நிவாரண நிதிக்கு புதிய சிக்கல்.. சென்னை ஹைகோர்டில் பரபரப்பு வழக்கு
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பெருமழை பெய்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்தத்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையான 6000 ரூபாய் ரொக்கமாக ரேஷன் கடைகளில் தரப்பட உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்ததாலும், பலரும் ஏடிஎம் கார்டுகளை தொலைத்துள்ளார்கள்.. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் வேலை செய்யாத நிலை உள்ளது. பலர் வங்கி கணக்கை பராமரிக்கவில்லை. இதன் காரணமாகவே நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
பணத்தை வங்கியில் செலுத்தாமல் கைகளில் கொடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறதாம். பலரும் வங்கிக்கணக்கை பராமரிக்காமல் 'ஜீரோ பாலன்ஸ்'ல் வைத்திருப்பார்கள், நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டால், அதன் ஒரு பகுதி வங்கிக்கு சென்றுவிடும். அதுபோல் வங்கிக்கடன் தவணைகளை செலுத்தாமல் விட்டிருந்தாலும் நிவாரணத் தொகை செலுத்தப்பட்ட உடனேயே வங்கியால் எடுக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக வங்கிகளில் கொடுக்காமல் கைகளில் கொடுப்பது நல்லது சிலர் கோரியதால் பணம் வங்கி கணக்கிற்கு பதில் கைகளில் ரொக்கமாக கொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது எனவும் அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு
நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு,நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications