“உதயநிதியால் எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க” அன்பில் மகேஷையும் பாராட்டிய சீமான் - திடீர்னு என்னாச்சு?
சென்னை : ஆளும் தி.மு.க அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் சீமான் இன்று பள்ளிக்கல்வித்துறையைப் பாராட்டியுள்ளார்.
Recommended Video
மேலும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ரொம்ப கொடூரமானது.. விடாதீங்க! எச்சரித்த மக்கள்! ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தந்த நீதிமன்றம்.. ஏன்?
உதயநிதி ஸ்டாலினின் நண்பர் அன்பில் மகேஷின் துறையைப் பாராட்டி அறிக்கை விட்டுள்ள சீமான், அதே கையோடு உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
மாணவர் தாய்மொழி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு அரசு ஆவணங்களில் தாய்மொழி எது என்கிற குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதியப்படுவதில்லை. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கல்விக்கூடங்களில் தாய்மொழியும் கட்டாயமாகக் குறிப்பிடப்படுகிறது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அத்தகைய குறைந்தளவு நடைமுறைகூட இதுவரை கடைப்பிடிக்கவில்லை.
அன்பில் மகேஷ் துறைக்கு பாராட்டு
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை, மற்ற மாநிலங்களிலிருந்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, மாற்றுச் சான்றிதழில் தாய்மொழியைக் குறிப்பிடும் பகுதியை இணைக்க வேண்டுமென்று முறையிட்டது. இதை ஆய்வுக்குட்படுத்திய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடப்புக் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தாய்மொழியைக் குறிப்பிடும் பகுதியை முதன்முறையாக இணைத்துள்ளது. கோரிக்கையை ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு எமது உளமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும்." எனத் தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவீஸ்
மேலும், "ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் இழப்பு எதுவும் இல்லை. திரைத்துறை தற்போது பாதுகாப்பாகவே உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சமீபத்தில் கிண்டல்
சமீபத்தில், உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ப்ரொமோஷன் செய்து வந்ததை விமர்சித்த சீமான், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்...படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!" என கிண்டல் செய்திருந்தார்.
சமாதானமா?
இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலினின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து அறிக்கை விட்டுள்ள சீமான், அதே கையோடு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார். திடீரென சீமான் சாந்தமாகியிருப்பது ஏன் என பலரும் குழம்பிப்போய் உள்ளனர்.